நடிகர் ராணா டகுபதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜர்!
ஆன்லைன் சூதாட்ட மோசடி வழக்கில் நடிகர் ராணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோர் அமலாக்கத்துறையிடம் விளக்கம் அளித்துள்ளனர். ஆன்லைனில் பல்வேறு சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதில், பிரபல நடிகர்கள் இந்த சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதால் பலர் மோசடி வலையில் சிக்கியது தெரியவந்தது.
இதையடுத்து 29 நடிகர்- நடிகைகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மீதும் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்தவாரம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி நடிகர் ராணா டகுபதி அன்றைய தினம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜராவதை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவர் ஆகஸ்டு 11ம் தேதி (இன்று) ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி ராணா டகுபதி இன்று ஐதராபத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த மாதம் 30ம் தேதியும், விஜய் தேவரகொண்டா கடந்த 6ம் தேதியும் நேரில் ஆஜர் ஆகியிருந்தனர்.