விபத்தில் இறந்த என்.எல்.சி. பொறியாளர் குடும்பத்திற்கு ரூ. 2.16 கோடி நஷ்ட ஈடு: கடலூர் கோர்ட் உத்தரவு
கடலூர்: நெய்வேலி பிளாக்-13 சேர்ந்தவர் பழனி. என்எல்சி இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ம் தேதி நெய்வேலி மகாத்மா காந்தி சாலை பிளாக் 18 ஓ.பி.சி அலுவலகம் எதிரில் இருசக்கர வாகனத்தில் பழனி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பழனி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இறந்த என்எல்சி இளநிலை பொறியாளர் பழனி குடும்பத்தினர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர்கள் மூலம் நஷ்ட ஈடு வழக்கு சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1 யில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இறந்த பழனி குடும்பத்தாருக்கு ஒரு கோடியே 95 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் என மொத்தம் ரூ. 2.16 கோடி நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி வி.ஆனந்தன் உத்தரவிட்டார்.