திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வடம்பிடித்து தேர் இழுத்தனர். திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. இவ்வாண்டு ஆவணித் திருவிழா கடந்த ஆக. 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 7.30 மணிக்கும், தொடர்ந்து காலை 7.35 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 8.35 மணிக்கும் நிலைக்கு வந்தது. அதன்பின் காலை 8.40 மணிக்கு வள்ளியம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.