காலத்தை வென்ற கன்னடத்து பைங்கிளி
சரோஜாதேவி நடித்த முக்கியமான படங்கள்
மணாளனே மங்கையின் பாக்கியம், நாடோடி மன்னன், சபாஷ் மீனா, தேடி வந்த செல்வம், பாகப்பிரிவினை, கல்யாண பரிசு, வாழவைத்த தெய்வம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், இரும்பு திரை, பார்த்திபன் கனவு, மணப்பந்தல், பாலும் பழமும், பனித்திரை, திருடாதே, குடும்பத்தலைவன், பாசம், ஆலயமணி, இருவர் உள்ளம், பெரிய இடத்துப் பெண், பணத்தோட்டம், ‘தர்மம் தலைகாக்கும்’, நீதிக்குப் பின் பாசம், படகோட்டி, தெய்வத்தாய், புதிய பறவை, என் கடமை, எங்க வீட்டுப் பிள்ளை, கலங்கரை விளக்கம், நான் ஆணையிட்டால், நாடோடி, பறக்கும் பாவை, அன்பே வா, குல விளக்கு, தேனும் பாலும், தாய்மேல் ஆணை, தர்மதேவன், ஒன்ஸ்மோர்.
சரோஜாதேவி பெற்ற முக்கியமான விருதுகள்
1965ல் கர்நாடக அரசு வழங்கிய ‘அபிநய சரஸ்வதி’ பட்டம். 1969ல் ஒன்றிய அரசு அளித்த பத்மஸ்ரீ விருது. 1980ல் கர்நாடக அரசு வழங்கிய ‘அபிநந்தன் காஞ்சனா மாலா’ விருது. 1989ல் கர்நாடக அரசு வழங்கிய ‘ராஜ்யோத்சவ’ விருது. 1992ல் ஒன்றிய அரசு அளித்த பத்ம பூஷண் விருது. 1997ல் சென்னையில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ வழங்கிய சாதனையாளர் விருது. 1997ல் தமிழக அரசு வழங்கிய எம்.ஜி.ஆர் விருது. 2001ல் ஆந்திர அரசு வழங்கிய என்.டி.ஆர் தேசிய விருது. 2003ல் ‘தினகரன் சாதனையாளர்’ விருது. 2006ல் பெங்களூரு பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம். 2007ல் ரோட்டரி சங்கம் வழங்கிய சிவாஜி விருது. 2007ல் என்.டி.ஆர் விருது. 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது. 2009ல் நாட்டிய கலாதர் விருது. 2009ல் கர்நாடக அரசு வழங்கிய ராஜ்குமார் தேசிய விருது. 2010ல் தமிழ்நாடு அரசு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது.
எம்.ஜி.ஆருடன் அதிக படங்கள்
1965க்கு பிறகு தமிழ் திரையுலகில் கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா ஆகியோரின் வருகை அதிரடியாக அமைந்ததால், சரோஜாதேவிக்கு வரவேண்டிய புதுப்பட வாய்ப்புகள் குறைந்தது. அவர் கன்னடத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் படவுலகை பெரிதும் நேசித்தார். ‘எனது பிறவிப்பயன்’ என்று தமிழ் மொழியையும், தமிழ் திரையுலக ரசிகர்களையும் பற்றி அடிக்கடி குறிப்பிட்டு பேசிய அவர், ‘தமிழ் ரசிகர்கள் எனக்கு அளித்த மிகப்பெரிய வரம்தான் முன்னணி நடிகையாக இருந்தது’ என்று சொல்லியிருந்தார். கே.சங்கர் இயக்கத்தில் ‘சாட்டையடி’ என்ற படத்தில் ஜெய்சங்கருடன் இணைந்து நடித்தபோது, சரோஜாதேவிக்கு குழந்தை பிறந்ததால், அப்படத்தை மேற்கொண்டு உருவாக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆருடன் 26, சிவாஜி கணேசனுடன் 22, ஜெமினி கணேசனுடன் 17 படங்களில் நடித்து சாதனை படைத்த சரோஜாதேவி, ஒருகாலத்தில் ‘சூப்பர் ஸ்டார்’களை விட அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். பெங்களூருவை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஜாவர் பைரப்பா, ருத்ரம்மா தம்பதியின் 4வது மகளாக பிறந்து, ராதாதேவி என்ற பெயருடன் வளர்ந்த சரோஜாதேவிக்கு சரஸ்வதி தேவி, பாமா தேவி, சீதா தேவி ஆகிய அக்காக்களும், வசந்தா தேவி என்ற தங்கையும் இருக்கின்றனர்.
நடனமாட வந்து ஹீரோயின் ஆனவர்
1967 மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீஹர்ஷாவுக்கும், சரோஜாதேவிக்கும் திருமணம் நடந்தது. அப்போது சரோஜாதேவி கடுமையான நிதி நெருக்கடி மற்றும் வருமான வரி சிக்கலை எதிர்கொண்டார். இதையெல்லாம் சமாளிக்க அவரது கணவர் உதவி செய்தார். 1967க்கு பிறகு தனது தாயின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். அவரது கணவரும் அனுமதி கொடுத்தார். அவர்களது திருமண வாழ்க்கை 1986ல் ஸ்ரீஹர்ஷா இறக்கும் வரை நீடித்தது. தமிழில் சரோஜாதேவிக்கு முதல் ஹீரோயின் வாய்ப்பு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. ‘தங்கமலை ரகசியம்’ என்ற படத்தில் 250 ரூபாய் சம்பளத்துக்கு ஆட வந்த அவர், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். எம்.ஜி.ஆர் முதன்முதலில் இயக்கிய ‘நாடோடி மன்னன்’ என்ற படத்தில் ஹீரோயினாக சரோஜாதேவியை நடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால், ஒரு பாடலுக்கு நடனமாடியவரை ஹீரோயினாக நடிக்க வைப்பதா என்று பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதோடு, சரோஜாதேவியின் தமிழ் உச்சரிப்பும் பெரும் இடையூறாக இருந்தது. ஆனால், மேக்கப் டெஸ்ட்டில் அசத்திய சரோஜாதேவி, ‘நாடோடி மன்னன்’ படத்தில் இளவரசி ரத்னா கேரக்டரில் ஜொலித்தார். ரத்னா கேரக்டர் அவரை தமிழகத்தின் பட்டிதொட்டி முழுக்க கொண்டு போய் சேர்த்தது. அவரை திரையில் பார்த்த ரசிகர்கள், ‘ஒரு பக்கம் பார்த்தால் பத்மினி, மறு பக்கம் பார்த்தால் வைஜெயந்தி மாலா’ என்று புகழ்ந்தனர்.
வைஜெயந்தி மாலாவுடன் போட்டி
1970களின் இறுதியில் சரோஜாதேவிக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர், வைஜெயந்தி மாலா. இயக்குனர் ஸ்ரீதரின் ‘கல்யாணப் பரிசு’, அதன் தெலுங்கு பதிப்பான ‘பெல்லி காணுக’ ஆகிய படங்களில் சரோஜாதேவி ஹீரோயினாக நடித்தார். ஆனால், இந்தி பதிப்பு ‘நஸ்ரானா’ படத்தில் வைஜெயந்தி மாலா நடித்தார். அப்போது எல்.வி.பிரசாத்தின் ‘சுக்ரால்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார் சரோஜாதேவி. ஒரே நாளில் இவ்விரு படங்களும் வெளியானதில், ‘சுக்ரால்’ மிகப்பெரிய வெற்றிபெற்றது. கடுமையான விமர்சனங்களை சந்தித்தது ‘நஸ்ரானா’. அன்றைய தமிழ் சினிமா ஹீரோயின்களான தேவிகா, பி.பானுமதி ராமகிருஷ்ணா, வைஜெயந்தி மாலா, பத்மினி ஆகியோரிடம் இருந்து சரோஜாதேவியை தனித்து காட்டியது, அவரது தனி பாணியிலான நடிப்பு. டிரெஸ்ஸிங், மேக்கப், ஹேர் ஸ்டைல், நடை, உடை, பாவனை ஆகியவற்றில் சரோஜாதேவி தனி பாணியை கையாண்டார்.
`கோப்பால்… கோப்பால்’
தனது திரைப்பயணத்தில் ஆரம்ப காலத்தில் தமிழை உச்சரிக்க மிகவும் சிரமப்பட்டார், சரோஜாதேவி. ‘கல்யாணப் பரிசு’ படத்தில் `வரு ரூபாய்’, ‘வண்ணுமில்லை’, ‘ச்சும்மா’ போன்ற வசனத்தை பேச தடுமாறிய அவருக்கு ஜெமினி கணேசன் வசனம் பேச கற்றுக்கொடுத்தார். ஆனால், பின்னாட்களில் இந்த வசன உச்சரிப்பையே தனது தனி அடையாளமாக்கி சாதித்தார் சரோஜாதேவி. முறைப்படி பரத நாட்டியம் கற்றுக்கொள்ளவில்லை, நாடகத்தில் நடித்த அனுபவமும் கிடையாது, கவர்ச்சி என்பது எள்ளளவும் கிடையாது. இப்படி பல்வேறு நெகட்டிவ்கள் இருந்தாலும் கூட, தனது அபிநயங்களாலும், தேர்ந்த நடிப்பாற்றலாலும், நளினத்தாலும் 1970-1980களின் கனவுக்கன்னியாக வலம் வந்து சாதித்தார், சரோஜாதேவி. ‘புதிய பறவை’ என்ற படத்தில் சிவாஜி கணேசனை காதலிப்பதாக நடித்து ஏமாற்றும் லதா கேரக்டராக அவர் பேசும் வசனம், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வசனங்களில் முக்கியமானது. `கோப்பால்… கோப்பால்’ என்று கொஞ்சும் குரலில் அவர் பேசிய டயலாக்கின் ரீச் பற்றி அனைவருக்கும் தெரியும்.
கர்நாடக முதல்வர், துணைமுதல்வர் இரங்கல்
முதல்வர் சித்தராமையா தனது இரங்கல் செய்தியில், ”மூத்த கன்னட நடிகை பி. சரோஜாதேவியின் மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. கன்னட சினிமா உட்பட தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். அவர் அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்பட்டார். சரோஜாதேவியைப் பற்றி நாம் நினைக்கும் போது, கிட்டூர் சென்னம்மா, பப்ருவாகனா, அன்னதாங்கி போன்ற படங்களில் அவரது வசீகரிக்கும் நடிப்புகள் நினைவுக்கு வருகின்றன. நல்ல ரசனை கொண்ட படங்கள் மூலம் பல தசாப்தங்களாக வீட்டுப் பெயராக இருந்து வருகிறார். சரோஜா தேவியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
துணைமுதல்வர் டி.கே.சிவகுமார்:- அபிநய சரஸ்வதி என்று பிரபலமாக அழைக்கப்படும் மூத்த கன்னட நடிகை பி. சரோஜா தேவியின் மறைவு செய்தி மனவேதனை அளிக்கிறது. கன்னடம் உட்பட ஐந்து மொழிகளில் நடித்து 6 தசாப்தங்களாக திரையுலகிற்கு சேவை செய்து, ஒரு புராணக்கதையாக மாறினார். மறைந்த அவரது ஆன்மாவுக்கு கடவுள் நித்திய சாந்தியை வழங்கட்டும். அவரது மகத்தான ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இந்த வலியைத் தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும். ஓம் சாந்தி