தாம்பரத்தில் பிரம்மாண்டமான ரூ.110 கோடியில் தலைமை மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தாம்பரம்: தாம்பரத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை- புறநகர் பிரிவு, ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொதுசுகாதார ஆய்வக கட்டிடம் மற்றும் 3 நகர்புற துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து தினமும் 1500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மருத்துவமனையில் போதுமான வசதி இல்லாததாலும், மழை காலங்களில் மழைநீர் மருத்துவமனைக்குள் புகுந்து விடுவதாலும் பல்வேறு வசதிகளுடன் மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு 2021ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு ரூ110 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் தேசிய சித்த மருத்துவமனை வளாகம் அருகே உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 6 தளங்கள் கொண்ட 400 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கட்டிட பணி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ.7.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை- புறநகர் பிரிவு, ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் மற்றும் 3 நகர்புற துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக்குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் செம்பாக்கம் இரா.சுரேஷ், இ.எஸ்.பெர்னாட், திருநீர்மலை த.ஜெயக்குமார், நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இக்கட்டிடத்தில், 4 அறுவை சிகிச்சை அரங்கம், 3 அவசர அறுவை சிகிச்சை அரங்கம், 111 தீவிர சிகிச்சை படுக்கை, 289 படுக்கை கொண்ட பொதுப் பிரிவு என, 400 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் தரைதளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன், மருந்தகம், புற நோயாளி பிரிவு. முதல் தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், நம்பிக்கை மையம், குடும்ப நலப் பிரிவு, கர்ப்பிணிகளுக்கான புறநோயாளிகள் பிரிவு, கால் போஸ் கோபி உள்ளிட்டவையும் அடங்கும். 2வது தளத்தில் மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ அறை, மகப்பேறு உயர் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவ முன்கவனிப்பு அறை, அறுவை சிகிச்சைக்கு பின்கவனிப்பு பிரிவு, 3வது தளத்தில் பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, நீரிழிவு பிரிவு, ரத்த வங்கி, குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு.
நான்காவது தளத்தில் ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, பெண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, தீக்காயப்பிரிவு ஆய்வகம் மற்றும் 5வது தளத்தில் அவசர அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, உயர் சார்பு அலகு பிரிவு, பொது சிகிச்சை பிரிவு, 6வது தளத்தில் குழந்தைகள் பொது பிரிவு, ஆண்கள் பொது பிரிவு, பெண்கள் பொது பிரிவு உள்ளது. இந்த மருத்துவமனையால் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், செம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதி மக்கள் பயனடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்கள் மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தற்போது அதிநவீன கருவிகளுடன் அனைத்து சிகிச்சைகளும் புதிய மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளதால் விபத்து உயிரிழப்புகள் பெருமளவு குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பல்லாவரம் பகுதிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 25 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.