நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து Gen Z தலைமுறையினர் போராட்டம்: போலீசார் துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழப்பு
காத்மாண்டு: நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு.
அந்த கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து நேபாளம் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி சென்றனர். நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் உயிரிழந்தார். இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து காத்மாண்டுவில் அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேபாளத்தில் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கைது செய்தனர்.
26 சமூக ஊடக தளங்களை தடை செய்வதற்கான அதன் சமீபத்திய நடவடிக்கையை எதிர்த்தும் நேபாளத்தில் ஒரு பெரிய போராட்டத்தை Gen Zக்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஆன்லைனில் தொடங்கிய போராட்டம் இன்று தெருக்கள் முழுவதும் பரவியது, போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
'Gen Z Revolution' என்று அழைக்கப்படும் இந்த போராட்டத்தில் காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளம் போராட்டக்காரர்கள் திரண்டனர். பலர் தடை செய்யப்பட்ட மண்டலங்களை மீறி, போலீஸ் தடுப்புகளை உடைத்துச் சென்றனர். மோதல்கள் அதிகரித்ததால், போலீசார் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர், தலைநகரில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினர்.