9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.34 லட்சத்தில் செயற்கை கால்கள்
ஊட்டி : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 9 பயனாளிகளுக்கு ரூ.8.34 லட்சம் மதிப்பீட்டில் செயற்கைகால்கள் வழங்கப்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்திவரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்று சேருவதை கண்காணிக்கும் வகையில், மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம், (நேற்று) நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம், தாயுமானவர் திட்டம், அன்பு கரங்கள் ஆகிய திட்டங்கள் குறித்தும், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் விவரம் குறித்தும் கேட்டறியப்பட்டது.
மேலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும், இதேபோன்று ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் குடியிருப்பு கட்டுமான பணிகளின் விவரம் குறித்தும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்தும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம், தற்போதைய நிலை குறித்தும், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில், துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கைகால் வழங்கும் திட்டத்தின் கீழ், 9 பயனாளிகளுக்கு ரூ.8.34 லட்சம் மதிப்பீட்டில் செயற்கால்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அபிலாஷா கௌர், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வன அலுவலர் (நீலகிரி கோட்டம்) கௌதம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.