ரூ.61.44 கோடியில் 8 சமூகநீதி விடுதி கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
சென்னை: ரூ.61.44 கோடியில் 8 சமூக நீதி விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு கலைஞர் 1969ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையும், 1989ம் ஆண்டு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தையும், 2007ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககத்தையும் ஏற்படுத்தினார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அந்த மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் சமூக நீதி கொள்கைகளை நிறுவுவதிலும், அதனை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
மதுரை மாவட்டம், வி.பெருமாள்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு ரூ.1.77 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் ரூ.2.17 கோடி செலவில் 50 மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் வகையில் சமூகநீதி பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடம் என மொத்தம் ரூ.3 கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளது. சென்னை, ராணிமேரி கல்லூரி வளாகத்தில் ரூ.26.73 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம்,
திருவையாறில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி இசைக்கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம், ஒரத்தநாட்டில் ரூ.7.98 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி, ஒரத்தநாட்டில் ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி கட்டிடம், தஞ்சாவூரில் ரூ.5.06 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி கூடுதல் கட்டிடம், மதுரை மாவட்டம், சாத்தமங்கலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம் மற்றும் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதிக்கு கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.61.44 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 1050 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 8 சமூகநீதி விடுதிக் கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அரசு கள்ளர் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் நலன் கருதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 23 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 18 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் கலையரசி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.