சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 800 போலீசார்
*எல்லையோர சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்
ஊட்டி : ஊட்டியில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றுகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காைல 10 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார்.
தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். இதனையடுத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடக்கிறது.
இதனையடுத்து பழங்குடியின மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இறுதியாக நாட்டு பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி. நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில் கடந்த சில நாட்களாக காலை வேளைகளில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 800க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 எல்லையோர சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு துப்பாக்கி ஏந்தி தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஊட்டி நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது.
ரயில் நிலையம், பஸ் நிலையம், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபர்கள் யாராவது தங்கி உள்ளார்களா? என்று திடீர் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் சுதந்திர தின விழா நடக்கும் அரசு கலைக்கல்லூரி மைதானம் சீரமைக்கப்பட்டு மேடை மற்றும் கொடி கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.