கூலி வேலை செய்து படிக்க வைத்த தாய் அரசு பணியில் சேர்ந்த 4 சகோதரிகள்; 2 பேர் ஆசிரியை, 2 பேர் போலீஸ்
திருமலை: தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் கூலி வேலை செய்து தனது 4 மகள்களை படிக்க வைத்தார். அவர்களில் 2 மகள்கள் அரசு பள்ளி ஆசிரியையாகவும், 2மகள்கள் போலீஸ் துறையிலும் பணியில் உள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வேப்புமாக்குலப்பள்ளியை சேர்ந்தவர்கள் முனிவெங்கடப்பா-கவுரம்மா தம்பதி. இவர்களது மகள்கள் வீணா, வாணி, வனஜாக்சி, குமாரி. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு முனிவெங்கடப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் கவுரம்மா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அதே நேரத்தில் 4 மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார். தாயின் உழைப்பை வீணாக்காமல் ஆர்வமுடன் படித்த 4 பெண்களும் தற்போது அரசு பணியில் உள்ளனர்.
மூத்த மகள் வீணா கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநில காவல் துறையில் கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தார். வாணி 2016ம் ஆண்டு 2ம் நிலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 3வது மகள் வனஜாக்சி போலீஸ் கான்ஸ்டபிளாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குமாரி டி.எஸ்.சி. தேர்வு எழுதி 2ம்நிலை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியையாக உள்ளார். தாய் கூலி வேலை செய்து 4 மகள்களையும் நன்றாக படித்து வைத்ததால் அவர்கள் அனைவரும் அரசு பணியில் உள்ளனர் என்று அந்த கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.