அப்துல் கலாம் கனவு திட்டம் என கூறி ரூ.1.30 கோடி வசூலித்து மோசடி: அதிமுக நிர்வாகிகள் 3 பேர் கைது
விருதுநகர்: அப்துல் கலாம் கனவு திட்டத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால் 3 மாதத்தில் ரூ.5 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.1.30 கோடி வரை வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் பழனிசெல்வம், அதிமுக பிரமுகர். இவரை, சேத்தூர் 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டுராஜன் (52), அதிமுக கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கந்தநிலா (54), அதிமுக மகளிர் அணி ராணி நாச்சியார் (52) ஆகியோர் அணுகி, அப்துல் கலாம் கனவு திட்டம் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில், ரூ.1 லட்சம் கட்டினால் 3 மாதங்களில் ரூ.5 லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பி பழனிசெல்வம் தன்னிடம் இருந்த பணம் மற்றும் தனது உறவினர்கள், நண்பர்கள் மூலம் ரூ.1 கோடியே 30 லட்சம் வரை வசூலித்து பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். ஆனால், 3 மாதம் கடந்த பின்பும் கூறியபடி பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். பழனிசெல்வத்திடம் பணம் கொடுத்தவர்கள் பலரும் முதிர்வு தொகை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து, விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீசிடம் பழனிசெல்வம் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து, மூவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகியோரை போலீசார் நேற்றிரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘அப்துல் கலாம் ட்ரீம் புராஜக்ட் என்ற திட்டத்தில் பட்டுராஜன், கந்தநிலா, வேலுநாச்சியார் ஆகியோர் பணம் வசூலித்து ரூ.1.30 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இத்திட்டத்தில் வேறு யாரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.