தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழப்பு!
பாங்காக்: தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. இந்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கோரா உள்பட 9 மாகாணங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேவேளை கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.