சமூக வலைதளத்தில் பரவிய இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோ: காதலன் உள்பட 2 பேர் கைது
புதுச்சேரி: புதுவையை சேர்ந்த இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ இளம்பெண்ணின் தாய் வாட்ஸ்அப்-க்கும் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய், இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த இளம்பெண்ணிடம் வீடியோ கால் பேசிய வாலிபர், புதுவை வீராம்பட்டினத்தை சேர்ந்த அபிமன்யு(25) என்பதும், அந்த வீடியோவை அவரது உறவுக்கார பெண் பகிர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அபிமன்யு மற்றும் உறவுக்கார பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு: அபிமன்யுவும் இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசும் போது அத்துமீறியதாக தெரிகிறது. இதனை காதலிக்கு தெரியாமல் அபிமன்யு தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். இதனிடையே தனது உறவுக்கார பெண்ணிடம் அபிமன்யு ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதனை அவர் திருப்பிக்கொடுக்கவில்லை. அபிமன்பு செல்போனை பார்த்த உறவுக்கார பெண், அதில் இருந்த அந்தரங்க வீடியோவை தனது செல்போனுக்கு அனுப்பி வைத்துக்கொண்டு, இதனை காட்டி மிரட்டி ரூ.1 லட்சத்தை வாங்கிக்கொண்டார்.
இருந்தும், இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும், இளம்பெண்ணின் தாய்க்கும் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அபிமன்யு மற்றும் உறவுக்கார பெண் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்து அனுப்பியதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவர்களையும் இவ்வழக்கில் சேர்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் இருந்து அந்தரங்க வீடியோவை அகற்றவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.