2027ம் ஆண்டில் நடக்க உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியீடு
இந்நிலையில், நாட்டின் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. இதில், ‘16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் கட்டமாக, லடாக், காஷ்மீர், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப்பகுதிகளில் 2026 அக்டோபர் 1ம் தேதியும், 2ம் கட்டமாக நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1ம் தேதியும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். மொத்தம் 34 லட்சம் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 1.3 லட்சம் பேர் அதிநவீன டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி கணக்கெடுப்பை மேற்கொள்வார்கள். மக்களுக்கு சுய கணக்கெடுப்பு வசதிகளும் வழங்கப்படும். முதலில், ஒவ்வொரு குடும்பத்தின் வீடுகளின் நிலை, சொத்துகள், வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்படும், அதன் பின் மக்கள்தொகை கணக்கிடப்படும். சுதந்திரத்திற்குப் பின் நடத்தப்படும் 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு இது’ என கூறப்பட்டுள்ளது.
* சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி ஒன்றிய அரசு மவுனம் காங். குற்றச்சாட்டு
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது:மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 16வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு பணிந்துதான் பிரதமர் மோடி ,மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால், நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான கணக்கெடுப்பு பற்றி எந்த வித குறிப்பும் இல்லை. ஏற்கனவே பல விஷயங்களில் ஒன்றிய அரசு யூடர்ன் அடித்துள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பில் இருந்தும் அரசு பின்வாங்குவதை போல் தெரிகிறது. அல்லது, இதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படுமா? என தெரியவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.