2025-26 மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (13.08.2025) சென்னை, செனாய்நகர், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2025-26 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார்கள். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் மூளைக்காய்ச்சல் தடுப்பூசி திட்டம் என்பது, முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 2007ஆம் ஆண்டு விருதுநகர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூர், மதுரை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய 15 மாவட்டங்களில் சென்னையில் இரண்டு மண்டலங்களில் என்று 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்ற குழந்தைகளை அதிகம் பாதிக்கின்ற இந்த நோய்க்கான மூளைக்காய்ச்சல் தடுப்பூசி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு எண்.109ன்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கின்ற 2 மண்டலங்கள் தவிர்த்து மீதமிருக்கின்ற 13 மண்டலங்களிலும், புதிதாக 7 மாவட்டங்கள் என்கின்ற வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி திட்டங்களை பொறுத்தவரை 1978ஆம் ஆண்டு 6 நோய்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு விரிவான தடுப்பூசி திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1985ஆம் ஆண்டு நாடு தழுவிய தடுப்பூசி திட்டமாக அது வலுப்படுத்தப்பட்டது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் தமிழ்நாட்டை பொறுத்தவரை காசநோய், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, எச்.இன்புளுயன்சா, நிமோனியா மற்றும் மினிஞ்சிடிஸ், ரண ஜன்னி, போலியோ, தட்டம்மை, ரூபெல்லா, ரோட்டா வைரஸ் வயிற்றுபோக்கு, நியூமோகோக்கல் நிமோனியா, மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்று பல்வேறு வகைகளிலான இந்த நோய் பாதிப்புகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 வகையான நோய் பாதிப்புகளை தடுப்பதற்கு இன்று 11 வகையான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மூளைக்காய்ச்சல் என்று சொல்லப்படுகிற ஜப்பானிய மூளைக்காய்ச்சல் சில வகையான கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்பு செய்து கடுமையான சிக்கல்களை, வலி பாதிப்புகளை உண்டாக்குகிறது. அது மட்டுமல்லாது மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நோயினால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நோய் பாதிப்பிலிருந்து உயிர் பிழைத்தவர்கள்கூட அதிக அளவில் நரம்பியல் விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இயற்கை தொற்று காரணமாக எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அதிகம் இருக்கின்ற மாவட்டங்களில் இந்த தடுப்பூசிகள் போடுவது என்பது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ஒருமுறை முகாம்களாக “One Time Campaign” அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் 1 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இன்று தொடங்கப்பட்டிருக்கும் இத்திட்டத்தை பொறுத்தவரை 1 முதல் 15 வரையிலான 27,63,152 குழந்தைகளுக்கு இந்த மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ஒரு டோஸ் போட நடைவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்கள், மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் கிராம, நகர சுகாதார செவிலியர்கள் மற்றும் தேவைப்படுகின்ற இடங்களில் இடைநிலை சுகாதார செவிலியர்கள் முதலானோர் அவர்களால் இந்த தடுப்பூசி திட்டம் இன்று தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
1 முதல் 15 வயது வரையிலான மொத்தம் 27,63,152 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ஒரு டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூன்று அணுகுமுறைகளில் செயல்படுத்தப்படும்:
1.பள்ளி தடுப்பூசி முகாம்: 5-15 வயதுடைய குழந்தைகளுக்கு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 13, 2025 முதல் செப்டம்பர் 12, 2025 வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகபட்சமாக 12 நாட்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும். அதைத் தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும். 2.அங்கன்வாடி தடுப்பூசி முகாம்: 1-5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளியிலிருந்து இடைநிற்றலான குழந்தைகளுக்கும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 13, 2025 முதல் அக்டோபர் 12, 2025 வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகபட்சமாக 12 நாட்களுக்கு நடைபெறும். அதைத் தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும். 3.ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் தடுப்பூசி முகாம்:
அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் 1-15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அக்டோபர் 13, 2025 முதல் நவம்பர் 12, 2025 வரை திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகபட்சமாக 12 நாட்களுக்கு முகாம் நடைபெறும். அதைத் தொடர்ந்து விடுபட்ட குழந்தைகளுக்கு ஒரு வாரம் தடுப்பூசி போடப்படும்.
எனவே மூளைக்காய்ச்சல் நோய் தீவிரத்தை கருத்தில் கொண்டு அனைத்து பெற்றோர்களும், பாதுகாவலரும், பள்ளி அதிகாரிகளும், சமுக ஆர்வலர்களும் கள சுகாதாரப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். முகாமில் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த தடுப்பூசி என்பது இலவசமாக போடப்படுகிறது. இந்த தடுப்பூசி 1 முதல் 15 வயது உள்ள குழந்தைகளுக்கு ஏற்கேனவே சொன்னது போல 20 இலட்சம் மேற்பட்ட குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி அனைவருக்கும் போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தப்பட்டு 27,63,152 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் உறுதுனையாக இருக்க வேண்டும், ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில் குமார், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கெளசிக், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு.சித்ரா, நிலைக் குழுத் தலைவர் (சுகாதாரம்) மரு.கோ.சாந்தகுமாரி, இணை இயக்குநர் மரு.வினய், மாநகர நல அலுவலர் மரு.ஜெகதீசன், மண்டலக் குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.