19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு
சென்னை: தென்னிந்தியப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலை கொண்டு இருப்பதால், தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. அத்துடன் ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட கூடுதலாக இருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும் சென்னை, ஈரோடு, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை படிப்படியாக குறைந்து வட மாவட்டங்களில் 20ம் தேதி பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.