தீபாவளி பண்டிகையை முன்னிட்டு; அக்டோபர் 1 முதல் 12,000 சிறப்பு ரயில்கள்
புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தீபாவளி மற்றும் சாத் பண்டிகை காலத்தில் ரயில்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 12,000 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்க உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 3 கோடி பேர் பயணம் செய்யலாம். இது, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமாகும். இந்த சிறப்பு ரயில்கள் அக்டோபர் 1 முதல் 45 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படும்.
தவிர கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்பதிவு தேவையில்லாத முற்றிலும் பொது பெட்டிகளை கொண்ட 150 ரயில்கள் தயார் நிலையில் வைக்கப்படும். கடந்த 23ம் தேதி வரை 10,000 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேவையின் அடிப்படையில் கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும். 70 ரயில்வே கோட்டங்களில் 29ல் 90 சதவீதத்திற்கு மேல் நேரம் தவறாமை எட்டப்பட்டுள்ளது. வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் தயார் நிலையில் உள்ளது. இதன் மற்றொரு ரயில் அக்டோபர் 15ம் தேதிக்குள் வந்து விடும். இவ்வாறு கூறினார்.