100 தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வரின் ஒன் டூ ஒன் சந்திப்பு நிறைவு: கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை; வெற்றிக்கு தடையாக இருப்பவர்கள் அதிரடி நீக்கம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் களத்தில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதையடுத்து ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார்.
நிர்வாகிகளை சந்தித்து முதல்வர் பேசும் போது, திமுகவின் வெற்றிக்கு துணையாக இருப்பவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். வெற்றிக்கு தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்ோகையும் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் மாவட்ட செயலாளர்கள் முதல் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் அதிரடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதுவும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 2026 தேர்தலுக்கு முன்னர் மேலும் மாற்றங்கள் இருக்கும் என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
கடந்த முறை திமுக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் மாவட்டச் செயலாளர் உள்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்படும் என கடுமையாக எச்சரித்தும் வருகிறார். உட்கட்சி மற்றும் கோஷ்டி பூசல்களை கலைத்து, தொகுதியை பலப்படுத்தி வெற்றி பெற வியூகங்கள் வகுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு நிர்வாகியின் கருத்துகளையும் தனித்தனியாகக் கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
இதற்கிடையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலம், புவனகிரி மற்றும் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். சந்திப்பின் போது சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், அறிவுரைகளை வழங்கினார். அது மட்டுமல்லாமல் நேற்றைய சந்திப்பின் மூலம் உடன்பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளின் சந்திப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 1.30 மணி நேரம் ஆலோசனை வழங்கியுள்ளார். நிர்வாகிகள் முன்வைக்கும் கோரிக்கைகள், அரசு சார்ந்த கோரிக்கைகள், கட்சி சார்ந்த கோரிக்கைகள் என பிரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் தன்னை சந்திக்க வரும் நிர்வாகிகளுக்கு முதல்வர் புத்தங்களை பரிசாக வழங்கி வருகிறார்.