இந்தியாவின் கருணையால் பாகிஸ்தானில் உயிர் தப்பிய 1 லட்சம் பேர்
இஸ்லாமாபாத்: இந்தியாவின் கருணையால் பாகிஸ்தானில் 1 லட்சம் பேர் உயிர் தப்பினர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. மேலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தானுடனான தொடர்பை முற்றிலுமாக நிறுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஜூன் முதல் பருவ மழை பெய்து வருகிறது. இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இந்த பருவ மழை காரணமாக தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறித்து, பாகிஸ்தானுக்கு சமீபத்தில் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் ஓடும் ராவி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் வழியாக கடலில் சேர்கிறது. எனவே, மனிதாபிமான நடவடிக்கையாக ஒன்றிய அரசு, பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இந்தியாவின் கருணையால் சுமார் 1 லட்சம் பாகிஸ்தானியர் உயிர் தப்பியுள்ளனர்.