மன அழுத்தம் போக்கி மனமகிழ்ச்சி தரும் 5 விஷயங்கள்
நன்றி குங்குமம் தோழி
இன்றைய வேலை பளு மற்றும் நம் வாழ்க்கை முறையில் மன அழுத்தம் என்பது தவிர்க்க இயலாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த மனதை வேறு சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விஷயமாக மட்டுமில்லாமல் அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட மன அழுத்தத்தை குறைக்க உதவும். அவை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
* புத்தகம் படிப்பது
மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
* யோகாசனம்
தினசரி யோகாசனப் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஓய்வு பெறும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும்பொழுது மனமானது அமைதி அடையும்.
* இசையை கேட்பது
கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு மகிழ்வதே. இசை நம் மனதை லேசாக்கும். துன்பங்களை மறக்கச் செய்யும்.
* தோட்டக்கலை
தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று செடிகள் ஆகியவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும்.
* சமைப்பது
சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும் அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும்தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால் கவலைகளை மறக்கச் செய்து மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது.
தொகுப்பு: பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம்.