சிறுகதை-பக்கத்துக் காம்பவுண்டில் ஒரு நைட்டிங்கேல்
நன்றி குங்குமம் தோழி
மடிக்கணினியில் வேகமாக என் விரல்கள் இயங்கிக் கொண்டிருந்த போது திடீரென அந்தக் குரல் குறுக்கிட்டது.“சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா...”எஃப். எம்மில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலுடன் இணைந்து பாடும் அந்த முகம் தெரியாத பெண்ணின் குரல், இல்லையில்லை, அலறும் குரல் காதில் மோதி இம்சித்தது. பக்கத்துக் காம்பவுண்டில் இருந்து அடிக்கடி கேட்கும் அந்தக் குரல். பாடுவது என்பது பெயரளவில்தான். குரலில் இனிமையே இன்றி கீச்சுக் குரலில் ரேடியோவில் ஒலிக்கும் பாடலை விட அதிக சத்தத்துடன் ஒலிக்கும் குரல் எரிச்சலைத்தான் கிளப்பும்.
அப்பார்ட்மென்ட்டுக்கு குடித்தனம் வந்த இந்த ஒரு வாரமாக நான் அனுபவிக்கும் பாட்டுத் தொல்லை இது. காலையில் ஆறு மணிக்கெல்லாம் பக்திப் பாடலுடன் ஆரம்பிக்கும் அவள் குரல், பத்து மணி வரையும், பின்னர் மதிய வேளைகளிலும் ஒலிக்கும். மாலை ஐந்தரைக்கெல்லாம் மீண்டும் பக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என்று இரவு ஏழு மணி வரை நீளும். தனக்கு நிறைய பக்திப் பாடல்களும் சினிமா பாடல்களும் தெரியும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகப் பாடுகிறாளா? பகல் முழுக்க அவள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒன்று பாடலாக அல்லது பேச்சாக.
ஏன் இத்தனை சத்தமாக பாடுகிறாள்? பக்கத்து வீட்டுக் காம்பவுண்டில் உள்ள மூன்று ஒண்டுக்குடித்தன வீடுகளில் ஏதோ ஒன்றில் வசிக்கிறாள். அவள் அங்கே பாடுவது இங்கே அப்பார்ட்மென்டின் முதல் தளத்தில் இருக்கும் எனக்கே இத்தனை சத்தமாகக் கேட்கிறது என்றால் அவளது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
தன்னை மிக இனிமையாகப் பாடும் நைட்டிங்கேல் பறவை என நினைத்துக் கொள்கிறாள் போல. அவளது உண்மையான பெயர் தெரியாததால் நைட்டிங்கேல் என்றே அவளுக்கு பெயர் சூட்டி விட்டேன். முரண்பாடாக இருந்தாலும் என்னைத் தனது குரலொலியால் இம்சிக்கிறவளுக்கு இந்தப் பெயர் தேவைதான் என்று குரூரமாக நினைக்கத் தோன்றியது எனக்கு.
நைட்டிங்கேலுக்கு பள்ளி செல்லும் ஐந்து வயது மகனும், இரண்டு வயதுப் பெண் குழந்தையும் இருக்கின்றன. இரண்டும் வாயிற்புற கேட்டருகில் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அவளுடைய பக்கத்து வீட்டில் ஒற்றையாளாகக் குடியிருக்கும் நடுத்தர வயது மனிதர் என்ன வேலை பார்க்கிறாரோ தெரியவில்லை. காலையில் போனால் இரவுதான் வீடு திரும்புவார். இன்னொரு வீட்டில் எழுபது வயதுக்கு மேற்பட்ட தம்பதியர் வசிக்கின்றனர். தாத்தா மாலை நேரத்தில் பாட்டியுடன் வாக்கிங் செல்ல வெளியே வருவார். மீதி நேரமெல்லாம் டி.வியில் மூழ்கியபடி வீட்டிற்குள் இருப்பார்.
காம்பவுண்டின் வலது கோடியில் துவைக்கும் கல் இருந்தது. தினமும் காலையில் பதினோரு மணிக்கு மேல் துணி துவைத்துக் கொண்டோ, பாத்திரங்களை துலக்கியபடியோ நைட்டிங்கேல், பாட்டியுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். தன் குடும்பக் கதை முழுக்க சொல்லுவாள். இந்த இரண்டாவது படுக்கையறையில் துணி மடிப்பது, அலமாரியை சுத்தம் செய்வது என நான் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவர்கள் இருவரும் பேசுவது என் காதில் தெளிவாக விழும்.
நைட்டிங்கேலின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. எங்கள் வீட்டு பால்கனியில் நின்று பார்த்தால் வெயில் மறைப்புக்காகவும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாகவும் போடப்பட்டிருந்த நீளமான ஆஸ்பெஸ்டாஸ் கூரைதான் கண்களுக்குத் தெரிந்தது. குனிந்து பார்த்தால் நின்று கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் மட்டும் தெரியும்.
அவர்களின் பேச்சில் இருந்து நான் பல விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.
அவளுடைய கணவனுக்கு தனியார் அலுவலகத்தில் கிளார்க் வேலை. அவள் ஒரு முதுகலைப் பட்டதாரி. ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக வேலை பார்த்து வந்தாள் என அறிந்தபோது வியப்பாக இருந்தது. இரண்டாவது முறையாகக் கருவுற்றதும் வேலையை விட்டு விட்டதும், கணவன் “வீட்டில் உட்கார்ந்து தண்டச்சோறு திங்கறியேடி” என்று எப்போதும் அவளை வார்த்தைகளால் வதைப்பதையும், சனிக்கிழமை இரவுகளில் குடித்துவிட்டு வந்து உதைப்பதையும் சொல்லி வருந்தினாள்.
வீட்டில் இருக்கும் நேரங்களில் விதண்டாவாதம் செய்து, தேவையில்லாத சண்டையும் இழுப்பானாம். அதற்காகவே, எஃப்.எம் ரேடியோ அல்லது செல்போனிலாவது பாட்டு வைத்து, கூடவே தானும் பாடுவதாக சொன்னாள். ‘அட! இதுதான் விஷயமா? தன் மனதில் இருக்கும் ஸ்ட்ரெஸைக் குறைத்துக் கொள்வதற்காகத்தான் இவள் இத்தனை சத்தமாகப் பாடுகிறாளா?’
“நாங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டு சண்டை போட்டா என் குழந்தைங்க மனசு வாடிப் போயிரும். சத்தமா நான் பாடுறதால, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க என்னைக் கிண்டல் பண்ணிக் கூடப் பேசலாம். ஆனா, அந்தாளு அசிங்கமா என்னைத் திட்டுறது வெளிய கேக்காதுல்ல?”
“வாஸ்தவந்தான். ஏந்தாயி, நானும் இங்க குடி வந்த நாளாப் பாக்குறேன், ஒங்க வூட்டுக்கு சொந்த பந்தம்னு யாரும் வந்து போறதில்லையே?” என்றார் பாட்டி. “எப்படி வருவாங்க? இந்தாளை லவ் பண்ணி, வீட்டை எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல. பிறந்த வீட்டிலேயும், புகுந்த வீட்டிலும் ஆதரவில்லை. காதலிக்கற போது வேற மாதிரி இருந்தாரு. இப்போ சுயரூபத்தைக் காமிக்கிறாரு. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு பாட்டி” என்ற போது எனக்கு அவள் மீது இரக்கம் சுரந்தது. ஒரு நாள் பாட்டி அவளிடம் “ஆமா, அதென்ன கண்ணு கையில புஸ்தகம்?’’ என்று கேட்டது காதில் விழுந்தது.“ இதுவா? அடுத்த வாரம் நெட் எக்ஸாம் வருது. அதான் படிச்சிக்கிட்டிருக்கேன்...”
“அதென்ன பரீட்சை?”
“காலேஜ்ல வேலை பாக்குற வாத்தியார்களுக்கு இந்தப் பரீட்சை ரொம்ப முக்கியம். பாஸ் பண்ணிட்டா காலேஜ்ல சம்பளத்தை ஏத்திக் கொடுப்பாங்க. எதிர்காலத்தில கவர்மென்ட் வேலை கூட கிடைக்கும்.”“சூப்பரு போ. எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சுப் போடு கண்ணு. நேத்துக் கூட உம்புருஷன், வூட்ல சும்மா உக்காந்துட்டிருக்கன்னு திட்டுனது எங்காதுல விழுந்துச்சு.” “ அது தினமும் விழுகிற அர்ச்சனைதான் பாட்டி. நான் இரண்டாவதா கர்ப்பமானதும் அதைக் கலைச்சிடச் சொல்லி இந்தாளு எத்தனை கலாட்டா பண்ணினாரு தெரியுமா?’’“எதுக்காகமா?”
“பிரசவத்துக்கும், குழந்தையை பார்த்துக்கிறதுக்கும் லீவு போட்டா, என் சம்பளம் வர்றது நின்னு போயிடும்ல. அதுக்குத்தான்...”
“அடப்பாவி, பணத்துக்காக வவுத்துல இருக்கிற புள்ளைய யாராவது கலைக்கச் சொல்லுவாங்களா?”
“எம்புருஷன் சொன்னாரே... என்னைய பெல்ட்டால அடிக்கக் கூட செஞ்சாரு. பிடிவாதமா முடியாதுன்னு சொல்லி, இந்தப் பிள்ளையை பெத்துக்கிட்டேன். இதை அந்தாளு தூக்கிக் கொஞ்சக்கூட மாட்டாரு. வேண்டாத சுமையா நினைக்கிறார். ஏச்சும் பேச்சும் வாங்கிக்கிட்டு கஷ்டப்பட்டு வளக்கறேன். ஒரு வயசுலேயே இதைக் கொண்டு போய் கிரஷ்ல விட்டுட்டு வேலைக்குப் போன்னாரு. எனக்குத்தான் மனசில்லை. அந்தாளை பொறுத்தவரைக்கும் நான் ஒரு பணம் காச்சி மரம். வேலைக்குப் போய் சம்பாதிக்கிறேன்னுட்டுத்தான் என் பின்னாடியே துரத்தித் துரத்திக் காதலிச்சிருக்கிறாரு...” “ச்சே... நெஞ்சுல ஈரமே இல்லாத மனுசன்...” பாட்டியின் பொருமல் என்னையும் தொற்றிக்கொண்டது.
“பெண் என்பவள் வெறும் இயந்திரமா என்ன? அவளுக்கென்று ஆசைகள், கனவுகள், உணர்வுகள் இல்லையா? வீட்டு வேலைகள் அத்தனையும் செய்து, வேலைக்கும் போய் சம்பாதித்துக் கொண்டு வந்து அதையும் புருஷன் கையில் தர வேண்டும். ஒரு தாய், கைக்குழந்தையை நிம்மதியாக வளர்க்கக்கூட அவளுக்கு சுதந்திரம் இல்லையா?’’அவன் மேல் வெறுப்பு வழிந்தது எனக்கு.
இப்போதெல்லாம் நான் நைட்டிங்கேலின் ரசிகையாகவே மாறிவிட்டேன். எப்படி பழைய பாடல், புதுப்பாடல் என இத்தனை பாடல்களை வரி விடாமல் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறாள் என்று வியப்பும் தோன்றும்.
மூன்று மாதங்கள் கழித்து ஒரு மாலை வேளையில் தொட்டிச் செடிகளுக்கு தண்ணீர் விட பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.“நெஜமாவா சொல்ற?” பாட்டியின் ஆச்சரியக் குரல் என் காதுகளை எட்ட, குனிந்து பார்த்தேன். அருகில் நைட்டிங்கேல் நின்று கொண்டிருந்தாள்.“ஆமாம் பாட்டி. நான் நெட் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டேன். போன வாரம் தான் ரிசல்ட் வந்தது. எனக்கு திருச்சியில் உள்ள ஒரு பெரிய காலேஜ்ல வேலை கிடைச்சிருச்சு. மத்தியானம்தான் தபால்ல அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்தது.
இன்னும் இரண்டே நாள்ல நான் டூட்டில ஜாயின் பண்ணணும்” என்ற அவளின் குரலில் உற்சாகம் வழிந்தது“பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு தனியாவா போற? உன் புருஷன் என்ன சொன்னாரு?” “அந்தாளுக்கும் சந்தோஷம்தான். அவரை விட மூணு மடங்கு சம்பளம் ஜாஸ்தியாச்சே? என்ன, இங்க தனியாக் கிடந்து சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கணும். இருக்கட்டும். அப்பதான் பொண்டாட்டியோட அருமை தெரியும்.”“பிரிவும், காலமும் நிச்சயமா மனுசனை மாத்தும் தாயி. பணத்தை விட பாசம் பெருசுன்னு உம்புருசன் ஒரு நா உணர்வான். அதுவரைக்கும் நீ புள்ளைகளோட சந்தோஷமா இரு” என்ற பாட்டியின் குரல் தழுதழுத்தது.
“நல்லாப் பழகிட்டோம். என் பேத்தி மாதிரி உன் மேல பாசம் வச்சிட்டேன். பிரியணும்னு நினைக்கறப்போ மனசு சங்கடமா இருக்கு தாயி...”சின்னக் குயிலாக ஒலிக்கும் அந்த நைட்டிங்கேலின் பாட்டை இனி கேட்க முடியாதே என எண்ணும் போது என்னையும் வருத்தம் சூழ்ந்தது.
தொகுப்பு: விஜி ரவி