சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் பெறுவது எப்படி?
நன்றி குங்குமம் தோழி
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுக்க 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பது சிக்கலான விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி ஜெயிக்கத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய, மாநில அரசாங்கங்கள் தயாராக உள்ளன. இளைஞர்கள் சுலபமான முறையில் சுயதொழில் தொடங்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டதே மாவட்டத் தொழில் மையம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதன் அலுவலகமும், இந்த மையத்தில் பொது மேலாளர் ஒருவரும் இருப்பார். இவர் மூலம் தொழிலுக்கான கடனை மானியத்துடன் பெறலாம்.மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் கூறும்போது, `மாவட்டத் தொழில் மையமானது சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள மக்களுக்குத் தொழில் சம்பந்தமான சந்தேகங்கள், ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை வழங்கி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், துறை சார்ந்த வங்கிகளின் மூலம் எளிமையான முறையில் கடன் பெற்றுத் தருவதற்கும் வழிவகை செய்கிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காகவும் புதிய தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது.சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் இதற்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி ஆலோசனை பெறலாம். தொழில்முனைவோர் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் தொழில் மையத்தின் உதவியுடன் வங்கிகள் மூலம் தொழில் கடனானது வழங்கப்படும்.தொழில் கடன் தருவதற்கான வங்கிகளின் வரம்பானது, விண்ணப்பிக்கும் நபரது வங்கிக்கணக்கின் சிபில் ஸ்கோரைப் பொறுத்து மாறுபடும்.
விண்ணப்பிக்கும் நபர் தொழில் கடன் வாங்கும் தகுதி உடையவர் என உறுதி செய்யப்பட்டபின், வங்கி மேலாளர் தொழில் தொடங்குவதற்கான இடம், தக்க சான்றுகளை ஆய்வு செய்தபின்னரே அவருக்குக் கடன் வழங்கப்படும். இவற்றில் அரசின் தொழில் கடனுக்கான மானியத் தொகை விண்ணப்பிக்கும் நபரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.உதாரணமாக, ரூ.10 லட்சம் மதிப்புக்கு ஒரு இ-சேவை மையம் ஒரு நபரால் தொடங்கப்படும்போது ரூ.3.5 லட்சம் மானியத் தொகையைக் கடன் பெறுபவரின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திவிடும். தொழில் தொடங்குவதற்கு அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் தொழில் கடன் பெற பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. திட்டங்களைப் பொறுத்து கடனுக்கான வரம்புகளும் மாறுபடும் என்பதைக் கடன் பெறுபவர்கள் மறக்கக் கூடாது, என்றார்.