மனதை மயக்கும் வாசனை திரவியங்களில் எது பெஸ்ட்?
நன்றி குங்குமம் டாக்டர்
பல நூற்றாண்டுகளாகவே வாசனைத் திரவியங்களின் பயன்பாடு என்பது நம் மக்களிடையே இருந்துவருகிறது. அதன் மயக்கும் நறுமணங்களுக்கு அப்பால், வாசனை திரவியம் பல நன்மைகளை வழங்குகிறது. வாசனைத் திரவியம் பயன்படுத்துவது ஒருவரின் தனிப்பட்ட பிம்பத்தை கணிசமாக மேம்படுத்துவதோடு தன்னம்பிக்கையையும் கவர்ச்சியையும் சுயமரியாதையையும் அதிகரிப்பதாக பலரும் கருதுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் வாசனை திரவியங்கள் பல வடிவங்களில் வந்துவிட்டது. அந்தவகையில், பர்ஃப்யூம், பாடிஸ்ப்ரே மற்றும் டியோடரண்ட் மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து அரோமா தெரபிஸ்ட் கீதா நம்முடன் பகிர்ந்து கொண்டவை: டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே மற்றும் பர்ஃப்யூம் இவை மூன்றும் ஒன்று என பலரும் நினைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது. ஏனென்றால், டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே ஆகிய இரண்டும் உடல் துர்நாற்றத்தை போக்குவதற்காக பயன்படுத்துவதாகும். ஆனால், பர்ஃப்யூம் எனும் வாசனை திரவியம் தன்னை சுற்றி மணம் பரப்புவதற்காக பயன்படுத்தப்படுவதாகும்.
பர்ஃப்யூம்களை பொருத்தவரை வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடியது. இது கிருமிகளை அழிக்கவோ, வியர்வையின் அளவை குறைக்கவோ செய்யாது. இவற்றை உடைகளில் மட்டுமே, ஸ்பிரே செய்ய வேண்டும். பொதுவாக பர்ஃப்யூம்கள் மூன்று வகைகளாக தயாரிக்கப்படுகிறது. அவை பேஸ் நோட்ஸ், மிடில் நோட்ஸ், டாப் நோட்ஸ் என்று உள்ளன. இதில் பேஸ் நோட்ஸ் தவிர மற்ற இரண்டால் நம் உடலுக்கோ, சுற்றுப்புற சூழ்நிலைக்கோ எந்த ஒரு பாதிப்பும் பெரிதாக வராது.
ஆனால் ஸ்ட்ராங்கான பேஸ் நோட்ஸ் பர்ஃப்யூம்கள் நம் உடலையும் சுற்றுப்புறத்தையும் பாதிக்கும் தன்மை உடையது. இதனுடைய அடர்த்தியான வாசனையால் சருமத்தில் அலர்ஜி, டெர்மடைட்டிஸ், மங்கு விழுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. டியோடரண்ட் கிருமிகளின் வளர்ச்சியை தடுப்பதுடன், நறுமணத்தின் மூலம் துர்நாற்றத்தையும் குறைக்கும்; ஆனால், வியர்வை வெளியேறுவதை குறைக்காது.
இதை, சருமத்தில் நேரடியாக உபயோகிக்கலாம். அதுபோன்று டியோடரண்ட்டின் இன்னொரு வகையாக பார்க்கப்படும் ஆன்டிபெர்ஸ்பிரன்ட் என்பது வியர்வை சுரப்பிகளின் துவாரங்களில் படிந்து, வியர்வையின் அளவை குறைப்பதுடன், கிருமிகளின் வளர்ச்சியை குறைத்து, துர்நாற்றத்தை மறைக்கும். பொதுவாக, டியோடரண்ட்கள் ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதனால்தான் துர்நாற்றம் களையப்படுகிறது. டியோடரண்ட்டில் அலுமினியம் குளோரைட், ஜிங்க், ஆக்ஸைடு போன்ற வியர்வையை தடுக்கின்ற மூலப்பொருட்களும் வாசனை எண்ணெய்களும் சேர்க்கப்படுகின்றன.
அதுபோல, பாடிஸ்ப்ரே தயாரிப்பில் பர்ஃப்யூம்கள் போல அடர்த்தியான எசன்ஷியல் எண்ணெய்கள் சேர்க்கப்படுகிறது. மேலும், ஆல்கஹாலுடன் டிஸ்டில்ட் வாட்டர் சேர்க்கப்படுகிறது. இதனால் பாடிஸ்ப்ரே நல்ல நறுமணம் தரக்கூடியது. ஆனால் வெகு நேரம் உடலில் தங்காது. வியர்வை சுரப்பிகளை கட்டுப்படுத்தாது. பாடி ஸ்ப்ரே எந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும் என்றால் கழுத்து, நெஞ்சுப்பகுதி, மணிக்கட்டின் உள்புறம், காதுகளுக்குப் பின்னால் மற்றும் முழங்கை உட்புறம் ஸ்ப்ரே செய்யலாம்.
மொத்தத்தில் நறுமண தேவை என்பது வியர்வை நாற்றத்தை மறைக்கவே. அதனால் பர்ஃப்யூம், பாடி ஸ்ப்ரேவை விட டியோடரண்ட் தான் சிறந்தது. மற்ற வாசனை திரவியங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
நறுமணம் தரும் திரவியங்கள்
உலகில் ஐந்து வகையான நறுமணம் தரும் பர்ஃப்யூம் பிரபலமாக உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்: Pure Perfume (Extrait de parfum): ப்யூர் பர்ஃப்யூம் அல்லது எக்ஸ்ட்ரைட் டி பர்ஃப்ம் என்று அழைக்கப்படும் இந்த வகை வாசனை திரவியம் அடர்ந்த மணம் உள்ள உயர்ந்த வகை வாசனை திரவியமாகும். இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருக்கும். இதன் மணம் குறைந்தது பத்துமணி நேரம் நீடிக்கும்.
ஈவ் டி பர்ஃப்யூம் (Eau de parfum): இந்த வாசனை திரவியம் குறைவான ஆல்கஹால் கொண்டது. சிறிய அளவில் பூசிக் கொண்டாலே நீடித்த வாசனையைக் கொடுக்கும். முடி, ஆடைகளில் இதனை தெளிக்கலாம். எட்டு மணி நேரம் இதன் வாசனை நீடிக்கும். ஈவ் டி டாய்லெடே (Eau de Toilette): இது உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் வாசனை திரவியமாகும். விலையும் குறைவானது. தினசரி பயன்பாட்டுக்கு உகந்தது. இதை உபயோகிக்கும்போது ஒரு பூரணமான நறுமணத்தை தந்து புத்துணர்ச்சியளிக்கிறது. இதன் நறுமணம் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும். இது கோடைக்காலத்துக்கு ஏற்ற வாசனை திரவியமாகும்.
ஈவ் டி கொலோன் (Eau de cologne): மற்ற வாசனை திரவியங்களைவிட இது விலை குறைவு. இது அதிகளவில் பயன்படுத்தும்போதுதான் வாசனையே தெரியும். எனவே பெரிய அளவிலான பாட்டில்களில் விற்கப்படுகிறது. குறைந்தது இரண்டு மணி நேரமே இதன் வாசனை இருக்கும்.
ஈவ் ப்ரைச் (Eau Fraiche): இது மற்ற வாசனை திரவியங்களில் இருந்து மிகவும் மென்மையான, நுட்பமான வாசனை திரவியமாகும். இதுவும் விலை குறைவானது தான். இது ஆல்கஹாலுக்கு பதில் வாசனை திரவியமும், தண்ணீரும் சேர்ந்த கலவை ஆகும். இது இரண்டு மணி நேரமே நீடிக்கும்.
தொகுப்பு: ரிஷி