குடல் புண் நோய் தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர்
இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன்
இன்றைய சூழலில் இந்தியாவில் 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் ulcerativeColitis எனப்படும் குடல்புண் நோயால் (அல்சர்) பாதிக்கப்பட் டுள்ளனர். இது பொதுவாக 20 முதல் 30 வயதினரையும், 50 முதல் 60 வயதினரையும் பாதிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாது எனினும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் என்கிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர்.கண்ணன்.இந்நோய் குறித்து அறிவோம்.
IBD என்று கூறப்படும் குடல்புண் நோயினை ulcerative Colitis மற்றும் Crotitie Disease என்று இரண்டு வகையாக கூறலாம். இந்நோயானது மேலை நாடுகளான பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
குடல்புண் நோய் என்றால் என்ன?
குடல்புண் நோய் என்பது நாட்பட்ட அல்லது தற்காலிகமாக குடலின் உள்ளே உள்ள சவ்வு படலத்தில்உண்டாகும் அழற்சி ஆகும்.இது பெரும்பாலும் பெருங்குடலில் உண்டாகும் மிகவும் அரிதாக சிறுகுடல் பகுதியிலும் முக்கியமாக சிறுகுடலும், பெருங்குடலும் இணையும் பகுதியான Teriminal ileum எனப்படும் பகுதியிலும் உண்டாகும். இந்த அழற்சியானது இன்னும் குடலின் உட்புற படலத்தினை பாதித்து குடலில் அல்சர் புண் உண்டாகும்.
குடல்புண் வருவதற்கான காரணங்கள்
அலசர்புண் வருவதற்கான காரணங்களை வரையறுத்துக் கூற முடியவில்லை. ஆய்வுகள் நம்புவது என்னவென்றால் வைரஸ் (அ) பாக்டீரியாக்களை எதிர்த்து நமது நோய் எதிர்ப்பாற்றல். செயல்படுவதன் காரணமாகவே குடலில் அழற்சி ஏற்பட்டு ரணம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. பரம்பரை காரணமாகவும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மன உளைச்சல், உணவு ஒவ்வாமை இவைகள் இந்த பிரச்னையை அதிகப்படுத்தும் காரணியாக அமைகிறது. புகைப்பிடித்தல் காரணமாகவும் குடல்புண் வரலாம்.
குடல்புண் அறிகுறிகள்
*அடிக்கடி பேதியாதல் மற்றும் ரத்தம் அல்லது சளியுடன் கலந்து பேதியாதல்.
*எப்போதும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி அல்லது கட்டுப்பாடின்றி அறியாமலேயே மலம் கழித்துவிடுதல்.
*அடிவயிற்றில் வலி (அ) இழுத்து பிடித்தல், குடல் முறுக்கி வலித்தல்
*சுரம், சோம்பல், பசியின்மை, எடை குறைவு
*ரத்த சோகை, (மலத்துடன் ரத்தம் கழிவதால் உண்டாகும்)
*நான்கு நாட்களுக்கு மேல் பேதி நீடித்தாலும், பேதியுடன் ரத்தமும், சளியும் கலந்து வந்தாலும் வயிற்றுவலி (அ) ஆசன வாயில் அதிகமாக வலி இருந்தாலும், நாவில் வறட்சி, அதிக தாகம், சிறுநீர் மிகவும் குறைவாக வந்தாலோ, காய்ச்சல் வந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சிகிச்சை முறை
நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடும். உதாரணமாக ஆரம்ப நிலையில் பேதி, வயிற்றுவலி, சளி வெளியாதல் போன்றவை குறைந்து காணப்பட்டால் mesalamine sulphasalazie, Aminosalicylic acid போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகிறது.
பேதி அதிகமாகவும், ரத்தம் செல்லுதல் அதிகமாகவும் இருந்தால் ஸ்டீராய்ட்கள் சில நாட்களுக்கு கொடுக்கப்படும். மருந்தினால் சரியான பலன் இல்லாத நோயாளிகளுக்கு நோயின் தீவிரம் அதிகமாக காணப்பட்டால் proctopolectomy எனப்படும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.அறுவைசிகிச்சைக்கு பிறகு நோய் திரும்பவருதலை தடுக்க சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்நோய் வாழ்நாள் நோயாக கருதப்படுகிறது. எனவே தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளும் அவ்வப்போது ரத்த பரிசோதனை கோலோனோஸ்கோபி போன்றவைகள் செய்து நோயின் பரவுதலை கண்காணிக்க வேண்டும்.8-10 வருடங்கள் என நாட்பட்டு இந்நோய் இருந்தால் புற்றுநோயாக மாற வாய்ப்புகள் உண்டு. எனவே, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலோனோஸ்கோபி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
உணவுமுறை தவிர்க்க வேண்டிய உணவுகள்
மதுபானங்கள், குளிர்பானங்கள், பசும்பால், ட்ரை ஃப்ரூட்ஸ், நார்ச்சத்துள்ள உணவுகள், கீரை வகைகள், ஓட்ஸ், கோதுமை, காபி, டீ, இறைச்சி, வெண்ணெய், நெய், டால்டா, சீஸ் , பாப்கார்ன், முட்டைக்கோஸ், மசாலா பொருட்கள், வெள்ளை சர்க்கரை ( ரீபைண்ட் சுகர்)துரித உணவுகள் சேர்க்க வேண்டிய உணவுகள்
*தாராளமாக தண்ணீர் அருந்த வேண்டும்
*இளநீர்
*நீர்மோர்
*கிரீன் டீ
*யோகர்ட்
*வேகவைத்த பழவகைகள்
*ஊற வைத்த பாதாம்
*ஆவியில் வேக வைத்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.
நாட்பட்ட குடல்நோய் புற்றுநோயாக மாறுமா?
நாட்பட்டு (8 லிருந்து 10 வருடங்கள்) இந்நோய் உள்ளவர்களுக்கு 1 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரை புற்றுநோயாக மாற வாய்ப்புகள் உள்ளன. எனவே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலோனோஸ்கோபி பரிசோதனை செய்து நோயின் தீவிரத்தை கண்காணித்தல் அவசியமாகும்.