பச்சிளம் குழந்தைக்கு என்னென்ன தேவை?
நன்றி குங்குமம் டாக்டர்
குழல் இனிது யாழ் இனிது
பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர பெற்றோர் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்டு செயல்படுவது குழந்தையின் நலனுக்கு மிகவும் இன்றியமையாததாகும். குழந்தை 9 மாதங்கள் கருவில் வளர்ந்து பிறக்கும் போது அதன் உடல் எடை சீராகவும் மன வளர்ச்சி பின் நாளில் நன்றாக இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறந்த குழந்தை 2.5 முதல் 3.9 கிலோ வரை இருப்பது சரியான எடையாகும்.
குழந்தை பிறந்தவுடன் நன்றாக அழுது, கை, கால்களை அசைத்தால் குழந்தையின் உடல் மற்றும் நரம்பு மண்டல இயக்கம் சரியாக உள்ளது என அறியலாம். மேலும் பிறந்த குழந்தையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். ஆரம்பகாலங்களில் போதுமான சரியான தூக்கம் குழந்தையின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான ஒன்று.
தூக்கம்
பிறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணிநேரம் தூங்குவார்கள். போதுமான தூக்கம் குழந்தையின் மூளையின் சரியான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. சில குழந்தைகள் பகலில் அதிகம் தூங்கலாம். சில குழந்தைகள் இரவில் அதிகம் தூங்குவார்கள். பெரும்பாலான குழந்தைகள் 3 மாதங்கள் வரை இரவு நேரம் தூங்குவதில்லை. புதிதாக பிறந்த குழந்தைகள் நீண்ட நேரம் தூங்கினால், தாய்ப்பால் கொடுக்க எழுப்ப வேண்டும்.
ஒவ்வொரு 3 முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு இரவுக்கும் பகலுக்கும் தெரியாது. அதனால் பகலில் அறையை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருங்கள். மென்மையான தாலாட்டு பாடல்கள் குழந்தையை அமைதியாக தூங்கச் செய்யும். தூங்கும் முன் இரவில் குழந்தைக்கு டயபர் மாற்றுவது, உடைகளை மாற்றுவது மெல்லிய இசையை ஓட விடுவது உணவளிப்பது மற்றும் அரவணைத்து இருப்பது போன்ற படுக்கை நேர வழக்கத்தை தொடங்கலாம்.
தாய்ப்பால்
குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். தாய்ப்பாலை தவிர வேறு எந்த விதமான நீர் ஆகாரமும் கொடுக்க கூடாது. குழந்தை பிறந்த முதல் 2 முதல் 5 நாட்கள் வரை கொலஸ்ட்ரம் என்கிற மஞ்சள் நிறத்தில் சிறிதளவு(40-50ml) பால் சுரக்கும். இதில் அதிக அளவு புரதம், வைட்டமின் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது. குழந்தைக்கு உடல் இயக்கத்திற்கான சக்தி மற்றும் எதிர்ப்பு சக்தியை கொலஸ்ட்ரம் கொடுக்கிறது.
5 நாட்களுக்குப் பின் தாய்ப்பால் நன்றாக சுரக்க ஆரம்பித்துவிடும். தாய்ப்பால் கொடுப்பது தாயின் அழகை கெடுத்துவிடும் என்பது உணமையில்லை ஆரோக்கியமான உணவும், சரியான உடற்பயிற்சியும்தான் உடல் அழகை கூட்டும்.
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற பல நோய்களை தாய்க்கு வராமல் தடுக்கிறது. குழந்தை தாய்ப்பால் பருகுவதால் சீரான உடல் எடை, நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி, அலர்ஜி நோய் தடுப்பு போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.
தாய்ப்பால் போதுமானதாக இருக்கிறதா என்று அறிய
1.குழந்தைக்கு ஒரு நாளில் 8-12 முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
2.தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை சரியான முறையில் மார்பகத்தை பற்றி குடிக்கிறதா என்று பார்க்கவும்.
3.குழந்தைக்கு பால் கொடுக்கும் போது ஒரு மார்பகத்தில் முழுவதுமாக கொடுத்துவிட்டு பிறகுதான் மறு மார்பகத்தில் கொடுக்க வேண்டும்.
4.குழந்தையின் எடை கூடினால் குழந்தைக்கு சரியான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
தாய்ப்பால் கொடுத்தபின் உடனடியாக படுக்க வைக்க கூடாது. தோளில் குழந்தையை போட்டு முதுகில் தட்டிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தை பால் கதுக்குவதை தவிர்க்கலாம். கர்ப்பகாலத்திலேயே பெண்கள் தாய்ப்பால் பற்றியும் தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றியும் தாய்ப்பால் சுரக்க உண்ண வேண்டிய உணவு முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது அவர்கள் குழந்தை பிறந்தபின் தன்னம்பிக்கையுடன் தாய்ப்பால் கொடுக்க உதவும்.
குழந்தையின் உடல் வெப்ப பராமரிப்பு
*பிறந்த குழந்தையின் வெப்பநிலை சரியான அளவில் பராமரிப்பது அவசியம்.
*வெயில் காலத்தில் மெலிதான காட்டன் உடைகள் அணிவிக்க வேண்டும்.
*அறையை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.
*போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
*இது குழந்தையின் உடல் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க உதவும்.
குளிர்காலங்களில் உடல் வெப்பம் குறையாமல் இருக்க நன்றாக குழந்தையை போர்த்தி வைக்க வேண்டும்.தலைக்கு குல்லா அணிவித்து கை, கால்களுக்கு உறை அணிவித்து வெப்பநிலை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு ஏற்படும் சில உடல் அறிகுறிகள் தானாக சரியாகிவிடும்
1.ஒரு நாளைக்கு 6-8 முறை மலம் கழிப்பது.
2.உடலில் அலர்ஜி போன்று ஏற்படுவது.
3.விக்கல் எடுப்பது
4.தலையில் பிறந்தவுடன் லேசான வீக்கம்
5.கண்களில் லேசான சிவப்பு.
குளிக்க வைப்பது
குழந்தையை பிறந்தவுடன் துடைத்தால் போதும். 24 மணி நேரம் குளிக்க வைக்க தேவை இல்லை.
பின்னர் வாரத்தில் 2 அல்லது 3 முறை குளிக்க வைத்தால் போதுமானது.
குளிக்க வைப்பதற்கு முன் பால் கொடுக்ககூடாது. குளிக்க வைத்த பிறகு பால் கொடுக்கலாம்.
தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை தேய்த்து மசாஜ் செய்து பின் குளிக்க வைக்கலாம்.
குழந்தையின் தோலுக்கு உகந்த அதிக வாசனை மற்றும் கெமிக்கல் சேர்க்காத சோப் பயன்படுத்துவது நல்லது.
வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தவும்.
குழந்தை வளர்ச்சியின் மைல்கற்கள்
டயபர்:-காட்டன் டயபர் பயன்படுத்துவது நல்லது
3 மணி நேரத்திற்கு ஒரு முறை டயபரை மாற்றுவது அவசியம்
புதிய டயபரை மாற்றுவதற்கு முன் 20 நிமிடம் குழந்தையின் தோல் பகுதி நன்றாக உலர அனுமதிப்பது சிறந்தது.
வளர்ச்சி மைல்கற்கள்
*உங்கள் குழந்தை அழும்போது நீங்கள் அதனுடன் பேசினாலோ எடுத்து அரவணைத்தாலோ அமைதியாகிவிடும்.
*உங்கள் முகத்தை உற்று நோக்கும்
*உரத்த சத்தத்திற்கு எதிர்வினையாற்றும்.
*தன்னுடைய கைகால்களை நன்றாக அசைக்கும்.
குழந்தைகளுக்கான விளையாட்டுகள்
பார்வைத்திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிகள்
குழந்தைக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள பொம்மைகள்/ வரைபடங்கள் கொண்ட அட்டைகளை காண்பிக்கலாம்.பிரகாசமான விளையாட்டு பொருள்களை காண்பித்து விளையாடலாம்.ஜிம்மேட் எனப்படும் படுக்கையின் மேலே பொம்மைகள் தொங்கக்கூடிய படுக்கையை பயன்படுத்தலாம்.
கேட்கும் திறன் மேம்பாடு
குழந்தையிடம் தினமும் பெற்றோர் முகம் பார்த்து பேச வேண்டும்.பிறந்த நாள் முதலே குழந்தையிடன் அதிகமாக பேசுவதை வழக்கமாக கொண்டால் Autism போன்ற குறைபாடுகள் வராமல் தடுக்கலாம் மற்றும் அறிவுத்திறனும் மேம்படும் மொழிவளர்ச்சியும் நன்றாக இருக்கும்.பல்வேறு விதமான மிதமான இசைகளை கேட்க செய்யலாம்.
மென்மையான பொம்மைகளை தொட்டு பார்க்க வைத்து விளையாடலாம்.குழந்தையின் கைகளை தட்ட வைக்கலாம். கால்களை சைக்கிள் ஓட்டுவது போல அசைக்கலாம்.
முக்கியமான ஒன்று குழந்தைக்கு நம்பிக்கையை கொடுப்பது. பெற்றோர் குழந்தை அழும்போது அரவணைத்து ஆறுதல் படுத்துவது குழந்தைக்கு உலகத்தின் நம்பிக்கையை(Trust) ஏற்படுத்தும்.
தொகுப்பு: சுரேந்திரன்