மைக்ரேன் காரணமும் ஆயுர்வேதத் தீர்வும்!
நன்றி குங்குமம் டாக்டர்
ஒற்றைத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலியால் ஆண்களை விட பெண்களே 60 சதவீதம் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் 20 - 50 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக 35-60 வயது வரை உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மைக்ரேன் தலைவலி எதனால் வருகிறது.. ஆயுர்வேதத்தில் இதற்கு தீர்வு என்ன.. போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆயுர்வேத மருத்துவர் அஜித் குமார் விவேகானந்தன்.
மைக்ரேன் என்றால் என்ன? மைக்ரேன் ஏற்பட காரணங்கள் என்ன?
மைக்ரேன் என்பது தலையின் ஒரு பக்கத்தில் ஏற்படும் தீவிரமான தலைவலியாகும். இது பல மணிநேரம்அல்லது சில நாட்கள் கூட நீடிக்கும் வாய்ப்புள்ளது. இது தலையில் ஏதாவது ஒருபுறம் மட்டுமே தீவிரமான வலியை ஏற்படுத்துவதால், ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படுகிறது. மைக்ரேன் தலைவலி பலவித காரணங்களால் ஏற்படுகிறது. இருந்தாலும் பெரும்பாலும் நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னையால் அதிகம் ஏற்படுகிறது.
குறிப்பாக அதிக வெளிச்சம், உரத்த சத்தம், கடுமையான வாசனை மற்றும் சில வானிலை மாற்றங்கள் போன்றவற்றாலும் ஒற்றைத் தலைவலி பலருக்கு ஏற்படுகிறது. சிலருக்கு, சீஸ், சாக்லேட், காஃபின், கோக், சிட்ரஸ் பழங்கள் மற்றும் செயற்கை இனிப்புகள் போன்ற சில உணவுகளை சாப்பிடும்போது ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. மேலும், அதிக அளவு மன அழுத்தம், பதற்றம் அல்லது உணர்ச்சி அதிர்ச்சி ஆகியவை ஒற்றைத் தலைவலி ஏற்பட காரணமாகிறது.
இதுதவிர, மரபணு காரணமாகவும் ஏற்படலாம். அதாவது குடும்பத்தில் யாருக்கேனும் முன்பு இருந்திருந்தால் அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதுபோன்று ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புகளாலும் ஏற்படுகிறது.
ஒற்றைத் தலைவலி வகைகள்
தற்போதைய சூழலில் பலரும் தலைவலி என்றதும் தனக்கு மைக்ரேன் இருப்பதாக சொல்லிக் கொண்டு வருகிறார்கள். ஆனால், எல்லா தலைவலியும் மைக்ரேன் இல்லை. சைனஸ் பிரச்னையால் மைக்ரேன் வரலாம். இன்ப்ளேமேஷன் பிரச்னையால் மைக்ரேன் வரலாம். இதுபோன்று பல்வேறு வகையான ஒற்றைத் தலைவலிகள் உள்ளன, ஒவ்வொன்றும் தனித்துவமான அறிகுறிகள் மற்றும் தூண்டுதல்களால் வகைப்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மைக்ரேன், குழந்தைகளுக்கு ஏற்படும் தலைவலி, நாள்ப்பட்ட தலைவலி, அதிக ஒளி மற்றும் ஒலியால் ஏற்படும் தலைவலி, விஷுவல் மைக்ரேன், தலைவலியற்ற சைலன்ட் மைக்ரேன், கண் சம்பந்தபட்ட பாதிப்பினால் ஏற்படும் ரெட்டினல் மைக்ரேன் மற்றும் ஸ்டேட்டஸ் மைக்ரேன் என பல வகைகள் உண்டு. சிலருக்கு பதினைந்து நாளுக்கு தலைவலி வந்து வந்து போகும். சிலருக்கு மாதத்தில் இரண்டு முறையாவது தலைவலி வரும். சிலருக்கு ஒருவாரம் வரை தொடர்ந்து இருக்கும். சிலருக்கு ஒரு சில மணிநேரம் வரை இருக்கும்.
சிலருக்கு தூங்கி எழுந்தால் சரியாகிவிடும். சிலருக்கு வாந்தி எடுத்த பின்பு சரியாகிவிடும். இந்த ஒற்றைத் தலைவலியானது ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது அவர்களின் வேலை, கவனம் செலுத்துதல் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை அனுபவிக்கும் திறனை பாதிக்கிறது.
ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்
ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும் தன்மை கொண்டது. அதாவது, சிலருக்கு தலையின் ஒருபுறம் மட்டுமே வலி ஏற்படலாம். சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு பக்கங்களிலும் கடுமையான தலைவலி ஏற்படலாம். குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம்.
அதிக ஒளி மற்றும் ஒலியினால் ஏற்படுகிறது. உதாரணமாக, அதிக வெளிச்சத்தை பார்க்கமுடியாமல் கண்கள் கூசும். சிலருக்கு கரும்புள்ளிகள் அல்லது ஏதாவது வடிவங்கள் போன்று கண்ணுக்கு முன்பு தோன்றக் கூடும். அதிக இரைச்சல் தரும் சத்தங்களை கேட்கும்போது தலைவலி ஏற்படலாம்.சாலையில் காணப்படும் ஜிக்ஜாக் கோடுகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் போன்ற காட்சி தொந்தரவுகளால் ஏற்படலாம்.
தோள்பட்டையில் ஊசியால் குத்துவது போன்று உணர்வு இருக்கும்.பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.நுகர்தல் மற்றும் சுவையில் மாற்றம் தெரியும்.ஆயுர்வேதத்தில் மைக்ரேன் தலைவலியை சூர்யாவர்த்தம் என்றும் சில நேரங்களில் அர்தாவபேதகம் என்றும் கூறுவோம். சூர்யா என்றால் சூரியன் என்றும் ஆவர்தா என்றால் துன்பம் என்றும் பொருள். இது சூர்யனுடன் தொடர்புடையதாக இருக்கும். அதாவது சூரிய உதயத்தின்போது தலைவலி ஆரம்பித்து, நண்பகல் நேரத்தில் உச்சத்தை அடைந்து மண்டையை பிளக்கும் அளவுக்கு வலி இருக்கும். பின்னர், மாலையில் கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்துவிடும் என்பதே இதன் பொருள். இது வெறும் வயிற்றில் இருக்கும்போது அதிகமாகும். சிலருக்கு பித்த வாந்தியாக வரும். இது சூர்யாவர்த்தம் மைக்ரேன் ஆகும்.
அடுத்ததாக, அர்தாவபேதகம் அர்த என்றால் ஒரு பாதி என்றும் பேதகம் என்றால் உடைக்கும் என்றும் பொருள். இது சூர்யனுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இது தலையில் ஒரு பாதியில் மட்டும் கடுமையான வலியை ஏற்படுத்தும். சிலருக்கு வாந்தி வருவது போன்று குமட்டல் இருக்கும். சிலருக்கு வாந்தி எடுத்தால் தலைவலி குறைந்துவிடும். இது எதனால் வருகிறது என்றால், ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படலாம்.
செரிமானமின்மை, கெட்டுப்போன உணவை உட்கொள்வது, நீண்ட நேரத்திற்கு சூரிய ஒளியில் இருப்பது, எண்ணெய் உணவுகள் மற்றும் காரமான உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது, கோபம், பொறாமை, மனஅழுத்தம் போன்ற மனோநிலைகள் மற்றும் உலர்ந்த காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஆகியவை இந்த சூரியாவர்த்த தலைவலிக்கு காரணமாக அமைகிறது.
இந்த வகை தலைவலிக்கு பல்வேறு தூண்டுதல்கள் உண்டு.
உணர்ச்சி தூண்டுதல்கள்: மனஅழுத்தம், கவலை, பதற்றம், அதிர்ச்சி, மனச்சோர்வு, உற்சாகம்.
உடல் தூண்டுதல்கள்: சோர்வு, தூக்கமின்மை, ஷிப்ட் வேலை, கழுத்து அல்லது தோள்பட்டை அழற்சி, பயணக் களைப்பு, குறைந்த ரத்த சர்க்கரை.
உணவுமுறை தூண்டுதல்: தவறவிட்ட தாமதமான அல்லது ஒழுங்கற்ற உணவு முறை, நீரிழப்பு, மது, டீ மற்றும் காபி போன்ற காஃபின் தயாரிப்புகள், சாக்லேட் மற்றும் சிட்ரஸ் பழங்கள்.
சூற்றுச்சூழல் தூண்டுதல்கள்: ஒளிமிகுந்த பிரகாசமான விளக்குகள், தொலைக்காட்சி அல்லது கணினித்திரை, புகைபடித்தல் அல்லது புகைப்பிடிக்கும் அறையில் இருத்தல், உரத்த சத்தங்கள், கடுமையான வாசனை.
மருத்துவ தூண்டுதல்கள்: சில வகையான தூக்க மாத்திரைகள், கருத்தடை மாத்திரை, மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளைப் போக்க ஹார்மோன் மாற்று சிகிச்சை, சாதாரண தலைவலியை போல் இல்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் வருகிறது. இந்த வலி வந்தால் சிலருக்கு இரண்டு மூன்று மணி நேரம் இருக்கலாம். சிலருக்கு காலை முதல் மாலை வரை இருக்கலாம். ஆனால் இந்த வலி இருக்கும் ஒவ்வொருவரும் நரகத்தில் இருப்பது போல் உணர்கின்றனர்.
பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி
ஆண்களைவிட பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. பருவமடைதல், மாதவிடாய் காலங்கள், கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிறுத்தம், அத்துடன் கருத்தடை மருந்துகள் பயன்பாடு, ஹார்மோன் மாற்று சிகிச்சையின் பயன்பாடு ஆகியவை ஒற்றைத் தலைவலி ஏற்படுத்தக்கூடும். ஒற்றைத் தலைவலி பெண்களுக்கு பொதுவாக பருவமடைதலுக்கு பிறகே தொடங்குகிறது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் அல்லது மாதவிடாய் காலத்தில் மிகவும் சகஜமாக வருகிறது. மேலும் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் நிற்கப்போகும் காலத்தில் அதிகரிக்கிறது. இந்த மாறுபாடுகள் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.
பருவமடைதல் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஆகியவை பெண்களின் ஒற்றைத் தலைவலியுடன் மிகவும் தொடர்புடைய காலங்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 70 சதவீதம் பெண்கள் தங்கள் தலைவலி மாதவிடாயுடன் தொடர்புடையதாக கூறுகின்றனர். மாதவிடாய் மைக்ரேன்கள் மாதவிடாய் அல்லாத ஒற்றைத் தலைவலியை விட நீண்ட காலம் நீடிக்கும். அதிக வலியுடன் இருக்கும் மேலும் சிகிச்சைக்கு உடனடியாக கட்டுப்படாது.
அறிகுறிகள்
இது ஒற்றைத் தலைவலி என்பதால் ஒரு பக்கம்தான் வரும் என்று இல்லை இரண்டு பக்கமும் கூட வரலாம். இந்த வகையான தலைவலிக்கு தூக்கமின்மையும், நேரத்திற்கு உணவு எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு காரணமாகும் தீவிர மைக்ரேன் வலி இருக்கும்போது சோர்வடைவதையும், பார்வை மங்குவதையும், குமட்டல் உண்டாவதையும் ஒரு பக்கம் கை கால்களில் பலம் குறைவதை உணரலாம். சில நேரங்களில் வாந்தி எடுத்த பின்னரே தலைவலி குறையும்.
இந்த தலைவலி இரண்டு, மூன்று நாட்களுக்கு கூட நீடிக்கும். தலைவலி இருக்கும் சமயத்தில் கண்களில அதிக ஒளி பார்த்தாலோ, காதினுள் அதிக ஒலி கேட்டாலோ கூட எரிச்சலை ஏற்படுத்தும். இருட்டு அறையில் அமைதியாக இருக்கும் இடத்தில் படுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இருக்கும். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் தறுவாயில் இத்தலைவலி மெல்ல குறைந்து தலைவலியால் பாதிக்கப்பட்டவர் இயல்பாக மாறுவதற்கு அதிக வாய்ப்புண்டு.
ஆயுர்வேத சிகிச்சை
ஆயுர்வேத சிகிச்சையானது நோய்க்கானது அல்ல. ஆனால் அது தனிநபரின் நோயின் அறிகுறிக்கு ஏற்ப மாறுபடும். ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிக்க பஞ்சகர்மா சிகிச்சைகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரின் விரிவான ஆலோசனைக்குப் பிறகு இது செய்யப்பட வேண்டும். மருந்துகள், சிகிச்சைகள் மற்றும் உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும்.
பஞ்சகர்மா
நாள்பட்ட ஒற்றைத் தலைவலியில், பஞ்சகர்மா, நச்சுகளை அகற்றவும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. நஸ்யம், சிரோதரை, சிரோ ஆப்யங்கம், சிரோவஸ்தி போன்ற சிறப்பு சிகிச்சைகள் நரம்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகின்றன.
நஸ்யம்
நஸ்யம் (மூலிகை தயாரிப்புகளை மூக்கின் வழியாக வழங்குதல்) - நரம்புகளில் நேரடியாகச் செயல்படும் சிகிச்சைகளில் ஒன்றாகும். நாசிக்குள் பல நரம்பு முனைகள் அமைத்து நமக்கு வாசனை உணர்வை ஏற்படுத்துகின்றது. நஸ்யம் மூலம் பயன்படுத்தப்படும் மருந்து எண்ணெய்கள் நேரடியாக இந்த நரம்பு முனைகளில் செயல்படுகின்றன. வாத பித்தங்களை அமைதிப்படுத்த உதவுகின்றன. மேலும் சைனஸில் படிந்திருக்கும் சளியை வெளியேற்றுகின்றன. இதனால், இப்பகுதியில் இருக்கும் அழுத்தம் தணிகிறது.
வஸ்தி (எனிமா) மற்றும் விரேச்சனம் (பேதி சிகிச்சை) போன்ற மற்ற பஞ்சகர்மா சிகிச்சைகளும் ஒற்றைத் தலைவலியில் உதவுகின்றன. ஆயுர்வேதத்தில் கசாய மருந்துகளான கல்யாணகம், பத்தியாக்ஷ தாத்திரியாதி ஆகியவற்றுடன் திரிகடுகு சூரணம், சிரஷுலாதி வஜ்ரரசம், பேதிக்கு கல்யாணக குடம், நசிய சிகிச்சைக்கு அணு தைலம், அதிமதுர தைலம், ஷீர பலா தைலம், பற்றிடுவதற்கு எலுமிச்சை சாற்றுடன் ராஸ்னாதி சூரணம், தலையில் மசாஜ் செய்வதற்கு அசன வில்வாதி தைலம், பலா குடிச்சியாதி தைலம் போன்ற மருந்துகளை பயன்படுத்த நல்ல பலன் தரும். இரவில் கல்யாணக நெய் 10 மில்லி பாலுடன் உணவுக்கு பின் கொடுக்கலாம். ஆயுர்வேதத்தில் இத்தலைவலியை தவிர்க்கவும் பின்பற்றவும் சொல்லப்பட்ட வழிமுறைகள்.
தவிர்க்க வேண்டியவை
* நோயைத் தூண்டும் உணவுப் பொருட்கள்
* புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்
* உலர்ந்த உணவுகள், துரித உணவுகள்
* நீண்ட நேர வெயில்
* பதற்றம், கோபம்
* மலச்சிக்கல்
பின்பற்ற வேண்டியவை
* தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி
* 8 மணி நேர தூக்கம்
* பசிக்கும் போது உணவு உண்ணுதல்
* ஒழுங்காக தண்ணீர் குடிப்பது
* புளி குறைத்து சமைப்பது
* சாதாரண உப்பை தவிர்த்துவிட்டு இந்துப்பு பயன்படுத்துதல் போன்றவை ஆகும்.
மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி பற்றி அடிவேர் வரை ஆராய்ந்து அதற்கு தகுந்த முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது மைக்ரேன் தலைவலியிலிருந்து முழுவதுமாக விடுபடலாம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்