மாதவிடாய் பிரச்னையை சரி செய்யும் பிரண்டை!
நன்றி குங்குமம் தோழி
எளிதில் கிடைக்கக்கூடிய பிரண்டை சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. மேலும் பலவித நோய்களை தீர்க்கவும், கட்டுப்படுத்தவும் அரு மருந்தாகும்.பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய பிரண்டையை போன்ற அருமையான மருந்து கிடையாது என சொல்லலாம்.வாயுத் தொல்லை இருப்பவர்கள் பிரண்டையை துவையலாக தயாரித்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகமாவதுடன், அஜீரணக் கோளாறுகளும் நீங்கும்.
* பிரண்டையை நெய் விட்டு வதக்கி கல் உப்பு தேவையான அளவு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.
* மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால் பிரண்டையை நெய்விட்டு வதக்கி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிரச்னைகள் தீரும்.
* பிரண்டையை சுத்தம் செய்து, சாறு எடுத்து அதற்கு தேவையான அளவு நல்லெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீராகிவிடும்.
* மூட்டுவலி இருப்பவர்கள், பிஞ்சாக உள்ள பிரண்டையை சுத்தம் செய்து நல்லெண்ணெய் மூழ்கும் அளவுக்கு ஊற்றி வதக்கி, இறுதியில் அந்த எண்ணெயை மூட்டு வலி, முழங்கால் வலி போன்றவைகளுக்கு தேய்த்து வந்தால் வலி தீரும். எலும்புகளையும், மூட்டுகளையும் வலிமையாக்கி விடும். மேலும் எலும்பு முறிவைக் கூட குணப்படுத்தும் வல்லமை படைத்தது.
* உடல் எடை குறைக்க வேண்டுமானால் பிரண்டையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
* பிரண்டையை நன்றாக காயவைத்து, அதை நெருப்பில் போட்டு எரித்து, சாம்பலாக்கி வைத்துக் கொண்டு, ஒரு பங்கு சாம்பலுக்கு மூன்று பங்கு தண்ணீர் விட்டு களைத்து, சிறிது நேரம் கழித்து, தெளிந்த நீரை மட்டும் பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 10 நாட்கள் வெயிலில் வைத்து, தண்ணீர் வற்றியவுடன் உப்பு மட்டும் தேங்கும். அந்த பிரண்டை உப்பை இரண்டு கிராம் அளவு எடுத்து பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை குறைந்து விடும்.
* பிரண்டை சாறு கொண்டு வாய் கொப்பளித்தால் பல் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.எளிதாகக் கிடைக்கும் பிரண்டையை உணவில் சேர்த்து, உடல் நலம் பெறுவோம்.
தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.