குறைந்த விலை, அதிக சத்து!
நன்றி குங்குமம் தோழி
உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரவல்லது கீரை வகைகள். சாதாரணமாக தோன்றினாலும் கீரைகள் பல சத்துக்கள் கொண்டவை. குறிப்பாக சில கீரைகள் உடலுக்கு பலவித சத்துக்களை வழங்கி, உடல் நலத்தை காக்க வல்லதாகும்.
முளைக்கீரை: வைட்டமின் ஏ, பி யுடன் இரும்பு, சுண்ணாம்பு, புரதம் ேபான்ற சத்துக்கள் நிறைந்தது. கண் பார்வையும், நரை முடி ஏற்படாமலும் உதவும். பலம் பொருந்திய எலும்புகளைப் பெறவும், சரும நோயிலிருந்து காத்துக் கொள்ளவும் உதவக் கூடியது.
அகத்திக்கீரை: புத்தி மந்தம், நினைவாற்றல் குறைவு, சோம்பல், அறிவு தடுமாற்றம் போன்றவைகளை மாற்றக் கூடியது. எளிதில் ஜீரணமாகக் கூடியது. கால்சியம் சத்தை தந்து எலும்புகளை பலம் பொருந்தியதாக்கும்.
அரைக்கீரை: உணவில் சேர்ப்பதால் உடலில் உயிரணுக்கள் கூடும். நரம்பு தளர்ச்சியைப் போக்கி உடல் பலம் பெறச் செய்யும். வாயுத் தொல்லையை நீக்கும்.
புளிச்ச கீரை: உடலில் உஷ்ணம் இயற்கையான அளவில் இருக்க உதவக் கூடியது. சொறி, சிரங்குகளை நீக்கி சருமத்தை காக்கக் கூடியது.
பொன்னாங்கண்ணி: உடல் உஷ்ணத்தைக் குறைத்து, கண் சம்பந்தமான நோய்களை அகற்றக் கூடியது. உயிரணுக்களின் எண்ணிக்கையை கூட்டச் செய்யும். புரத சத்து அதிகம் கொண்டதால், ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயத்தை பலப்படுத்தக் கூடியது.
முருங்கைக்கீரை: அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ சத்தும், சுண்ணாம்பு சத்தும் நிறைந்தது. ஆதலால் நோய் எதிர்ப்பு சக்தி தருவதுடன், ரத்தத்தை சுத்திகரித்து, இதயத்துடிப்பை சீராக வைப்பதுடன் நரம்புகளுக்கும், பற்களுக்கும் பலம் தரக்கூடியது.
புதினா: வாந்தியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. குறிப்பாக கருவுற்ற பெண்களின் வாந்தியை கட்டுப்படுத்தும். சமையலில் மணத்தையும், ருசியையும் அதிகரித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.தினசரி உணவில் தவறாமல் ஒரு கீரையை சேர்த்து உண்போம். நலமுடன் வாழ்வோம்.
தொகுப்பு: எஸ்.ஆஷாதேவி, சென்னை.