மருந்து, மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர்
உடல் நிலை கோளாறுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக்கூடாது.
ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். எனவே, சில உணவுகளை தவிர்ப்பது நலமாகும். அந்தவகையில் என்னென்ன உணவுகள் தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
அமிலத்தன்மை உள்ள உணவுகள்
அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவுகளான எலுமிச்சை, தக்காளி போன்ற உணவுகள், சிக்னலில் வண்டிகள் நகர முடியாமல் நிற்பதை போன்று இந்த உணவுகளும் உடலில் குணப்படுத்தும் செயலை தடுத்து விடுகின்றன. மேலும் மருந்துகளில் உள்ள சக்தியை உடல் உறிஞ்சுவதை தடுத்து விடுகின்றன. ஆகவே வைட்டமின் சி நிறைந்த உணவுகளை
தவிர்ப்பது நல்லது.
பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவைகளும், மருந்துகளின் சக்தியை குறைக்கும் தன்மை உடையது. மேலும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். அதனால் தான் மருத்துவர்கள், ஏதேனும் உடல் நிலை சரியில்லை என்றால், மருந்து சாப்பிடும் போது பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க சொல்கிறார்கள். ஏன், சில சமயங்களில் வயிற்றுப் போக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
நார்ச்சத்து உணவுகள்
ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக் கொள்ளும் போது, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான கீரைகள் மற்றும் பீன்ஸ் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை மருந்துகளில் உள்ள தன்மைகளை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன. மேலும், இவையும் பால் பொருட்களைப் போல் வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடவும் கூடும். எனவே இவற்றை தவிர்ப்பதும் நல்லது.
ஆல்கஹால்
மருந்து மாத்திரைகளுக்கு ஆல்கஹால் முற்றிலும் எதிரி. ஏனெனில் அந்த ஆல்கஹால், மாத்திரைகளில் உள்ள மருந்துகளின் தன்மையை குறைத்து விடுகின்றது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நோய்கள் விரைவில் குணமாவது தடைபட்டு, நீண்ட நாட்கள் அந்த நோயை உடலில் வைத்துக் கொள்ள நேரிடும். ஆகவே விரைவில் நோய் சரியாக வேண்டுமென்றால், ஆல்கஹால் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஹெவி ஃபுட்
மாத்திரைகளை சாப்பிடும் போது வாயை கட்டுப்படுத்த வேண்டும். சுவையாக உள்ளது என்று எளிதில் செரிமானமாகாத உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாத்திரைகளை சாப்பிடும் போது, உடலில் அனைத்து செயல்களும் சரியாக நடைபெற்றால் தான், உடல் நிலை விரைவில் சரியாகும். செரிமானமாகாத உணவுகளை சாப்பிட்டால், மருந்துகளில் உள்ள பொருட்களை, உடல் உறிஞ்சிக் கொள்ளாமல் போகும். ஆகவே விரைவில் செரிமானமாகும் லைட் உணவுகளை சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தொகுப்பு: ரிஷி