உறுப்பு தானம் செய்வீர்... உயிர் காப்பீர்!
நன்றி குங்குமம் டாக்டர்
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்வார்கள். உண்மையில் எந்த தானமும் மிகச் சிறந்ததுதான். அதிலும் நவீன மருத்துவம் மனித குலத்துக்கு கண்டறிந்து கொடுத்த உறுப்பு தானம் என்பது மகத்தானது. மனிதன் என்பவன் எத்தனை மகத்தானவன் என்பதைக் காட்டுவது உறுப்பு தானம். ஒருவர் உயிரிழந்த பின்பு அவரின் உறுப்பை எடுத்து, நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பிழந்த நபருக்குத் தருவதுவே உறுப்பு தானம்.
விபத்து காரணமாகவோ அல்லது ஏதேனும் தீவிர நோய் காரணமாகவோ திடீரென உடல் உறுப்பு செயலிழந்து வாழ முடியாத சூழலில் தவிக்கும் சக மனிதருக்கு, முகமறியா ஒருவர் தன் உறுப்புகளை தானமாக தந்து காப்பாற்ற முன்வருவதற்கு மிகப் பெரிய கருணை வேண்டும். இதையே உடல் உறுப்பு தானம் என சொல்கிறோம். இந்த உடல் உறுப்பு தானம் என்பது மனித இனத்திற்கு கிடைத்த மாபெரும் கொடையாகும்.
எனவே, மரணத்தருவாயில் இருக்கும் ஒருவரை மீட்டெடுத்து வாழ்வளிக்க ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்று உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 -ஆம் தேதியன்று உலகளவில் உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானம் குறித்து அறிவோம்.
உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம்
இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் வரை உடலில் முக்கிய உறுப்புகளின் செயலிழப்பினால் மரணமடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மாற்று உறுப்புகள் கிடைத்தால், அவர்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையை தொடர்ந்து இந்த பூமியில் வாழ முடியும். எனவே, மண்ணுக்குள் புதைந்து அழிந்து போகும் விலைமதிப்பற்ற உடல் உறுப்புகளை மற்றவர் வாழ தானம் செய்ய முன் வர வேண்டும்.
உடல் உறுப்பு தானம் எத்தனை வகை
உடல் உறுப்பு தானத்தில் இரு வகைகள் இருக்கின்றன. ஒன்று உயிரோடு இருக்கும்போதே உடல் உறுப்புகளை தானம் செய்வது. இதில், பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளே தங்களது உறுப்புகளை தானம் செய்வது. அந்தவகையில். ஒருவரின் சிறுநீரகம், கல்லீரலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி என தானம் செய்வார்கள்.
மற்றொன்று இயற்கையாக மரணமடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை கண்கள், இதய வால்வு, தோல், எலும்புகள் ஆகியவற்றை அவரது குடும்பத்தாரின் அனுமதியுடன் தானம் செய்வது. அதுபோன்று மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம், குடல், நுரையீரல் போன்றவையும் தானமாக அளிக்கப்படுகிறது. அந்தவகையில், ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் குறைந்தபட்சம் 8 பேரிலிருந்து அதிகபட்சமாக 12 பேரை காப்பாற்ற முடியும் என்கிறது மருத்துவ உலகம்.
யாரெல்லாம் தானம் செய்யலாம்
உயிருள்ள ஒருவர் உறுப்பு தானம் செய்ய விரும்பினால், அவர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அவரது உடல்நிலை சரியானதாக இருக்க வேண்டும். இயற்கையாக மரணமடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய எந்தவித வயது வரம்பும் இல்லை. இவர்களது, கண்கள், கார்னியா, இதய வால்வுகள், தோல், எலும்பு போன்றவை தானம் செய்ய முடியும். ஆனால், இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல் போன்ற முக்கிய உறுப்புகளை மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே தானம் அளிக்க முடியும். புற்றுநோய், எச்.ஐ.வி, சர்க்கரை நோய், சிறுநீரக நோய், இதய நோய் உள்ளவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய இயலாது.
எந்த உறுப்புகளை எந்த வயது வரை தானம் செய்யலாம்
70 வயது வரை ஒருவரது சிறுநீரகங்கள், கல்லீரல், எலும்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.
50 வயது வரை ஒருவரது இதயம், இதய வால்வுகள், நுரையீரல் தானம் செய்யலாம்.
60-65 வயது வரை கணையம், குடல் தானமளிக்க முடியும்.
100 வயது வரை கார்னியா, தோல் தானமளிக்க முடியும்.
பதிவு செய்வது எப்படி?
உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது விபத்தினால் இறந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.
தமிழகம் தொடர்ந்து முன்னிலை
உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2020 -ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 6-வது முறையாக உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் விருது பெற்றுள்ளது.
விழிப்புணர்வு
நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால் போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, உயிரற்ற பின்பு மண்ணுக்குள் மக்கும் உடல் உறுப்புகளை மனிதர்கள் வாழ தானம் செய்வோம்!