பாலை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
நன்றி குங்குமம் டாக்டர்
பொதுவாக நமக்கு சில கேள்விகள் எப்போதும் மனதில் முளைத்துக்கொண்டே இருக்கும். அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கவே கிடைக்காது... அந்த மாதிரி ஒரு கேள்விதான் பாலை ஃப்ரீசரில் வைக்கலாமா கூடாதா என்பது... அதற்கான விடையை தெரிந்து கொள்வோம்.
பாலை ஃப்ரீசரில் வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.. அதில் குறிப்பிட்டுள்ள காலாவதி தேதி வரும் வரை பாலை தைரியமாக ஃப்ரீசரில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சில குறிப்புகள் கீழே உள்ளன, அவற்றை பின்பற்றுவது நல்லது.பொதுவாக பாலை உறைய வைக்கும்போது பாலுக்கு விரிவடையும் தன்மை உண்டு. அதனால் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கும்போது அந்த பாட்டில் முழுவதும் ஊற்றாமல் பாட்டிலில் முக்கால் பகுதி ஊற்றி உறைய வைக்கலாம். இதனால் பாட்டில் வெடிக்காமல் இருக்கும்.
ஃப்ரீசரில் வைத்து உறைய வைத்த பாலை பயன்படுத்துவதற்கு முன்னர், தண்ணீரில் சிறிது நேரம் எடுத்து வைத்து விட்டு பின்பு பயன்படுத்தலாம் அல்லது ப்ரீசரில் இருந்து ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பயன்படுத்தலாம். இதனால், அதனை உட்கொள்வதற்கு பாதுகாப்பாக இருக்கும். நீண்ட நேரம் வெளியில் எடுத்து வைப்பதால் அதன் வாசனை மற்றும் தோற்றம் கெட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டு பயன்படுத்தவும்.
சேமித்து வைத்திருந்த பால், காலாவதி அடைவதற்கு முன்னர், அதனை பல்வேறு வழிகளில் உணவில் பயன்படுத்திக் கொண்டால் அதன் ஊட்டச்சத்துகளை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல பாலை ஃப்ரிட்ஜில் எப்படி வைத்தாலும் சிலசமயங்களில் கெட்டுவிடக்கூடும். பெரும்பாலும், ஃப்ரிட்ஜ் கதவின் உட்புறமுள்ள பாட்டில் ஹோல்டர்களில் பலரும் பால் பாக்கெட்டுகளை வைப்பார்கள். ஆனால், இந்த இடத்தில் வைப்பதுதான் பால் விரைவில் கெட்டுப் போவதற்கான காரணம்.
ஏனென்றால், ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூடும்போது, வெளிப்புறம் உள்ள உஷ்ண காற்று, இந்த பாட்டில்களில் நேரடியாக பட்டுவிடுகிறது. இதனால், குளிர்ச்சியும், வெப்பமும் என மாறி மாறி பால் பாத்திரத்தில் படும்போது, பாலில் உள்ள பாக்டீரியா வளர காரணமாகிவிடும். எனவே, வெளிப்புற காற்று படாதபடி ஃப்ரிட்ஜ் உள்பக்கமாக அல்லது ஃப்ரீசருக்குள் பால் பாக்கெட், பால் பாத்திரத்தை வைப்பது மிகவும் நல்லது. இதனால், பாலின் வெப்பநிலை பாதிக்காது. ஒரே சீரான குளிர் இருப்பதால், அதுவும் ஃப்ரீசரில் உள்ளதால், பாலில் உள்ள பாக்டீரியாக்கள், இந்த சூழலில் செயல்பட முடியாது. பாலும் பாதுகாப்பாக இருக்கும்.
தொகுப்பு: ரிஷி