பாலக் கீரையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர்
உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா
கீரை என்றாலே சத்துகள் நிறைந்தது என நம் அனைவருக்கும் தெரியும். அதேசமயத்தில் பல்வேறு கீரை வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் தனிச்சிறப்பு இருக்கின்றன.
அந்த வகையில் பாலக்கீரையும் ஒன்று. பாலக்கீரையின் தாயகம் தென் ஐரோப்பாவாகும். அந்தப் பகுதிகளில் இந்தக் கீரை அதிகம் காணப்படுகிறது.பாலக்கீரையில் வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க் போன்ற பல்வேறு சத்துகள் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக புற்றுநோயினை தடுப்பதில் பாலக்கீரை சிறந்து விளங்குவதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பாலக்கீரை பசலைக்கீரை இனத்தை சார்ந்ததாகும். எனவே இதற்கு பசலைக்கீரை என்ற பெயரும் உண்டு. பாலக்கீரை பெரும்பாலும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. அனைத்து காலங்களிலும் கிடைக்கப் பெற்றாலும் குளிர்ச்சியான காலங்களில் நன்கு விளைந்து காணப்படும்.
பாலக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துகள்
இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் தாவர மூலக்கூறுகளான பிளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், சாப்போனின்கள் மற்றும் டானின்கள் போன்ற பல நன்மையளிக்கும் மூலக்கூறுகள் உள்ளடங்கியுள்ளன.
பாலக் கீரையின் மருத்துவ குணங்கள்
புற்றுநோயைத் தடுக்க: பாலக்கீரையில் உள்ளடங்கிய பிளேவோனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் பல்வேறு வகையான புற்றுநோயைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் கருப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயை தடுப்பதில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தீங்கு விளைவிக்கக் கூடிய உணவு பழக்கங்கள் மற்றும் மது, அதிக அளவிலான காபி மற்றும் டீ அருந்தும் பழக்கம், துரித உணவுகள் போன்றவை பெருங்குடல் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இதனை தடுப்பதிலும் பாலக்கீரை சிறந்து விளங்குகிறது.
அல்சைமர் பிரச்னைக்கு தீர்வாகபாலக்கீரையில் உள்ள பாலி பினால்கள், பிளேவோனாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் மூளையின் செயல்பாட்டினை ஊக்கப்படுத்தி அல்சைமர் பிரச்னையைத் தடுக்க உதவுகிறது மேலும் நரம்பு மண்டல செயல்பாட்டினையும் மேம்படுத்த உதவுகிறது.ரத்த அழுத்தத்தை குறைக்கவும், அல்சர் உள்ளிட்ட பல வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னையை தடுக்கவும் உதவுகிறது. வைட்டமின் ஏ, மற்றும் சி நிறைந்துள்ளதால் சருமப்பொலிவினை மேம்படுத்தவும், தோல் சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தவும் உதவுகிறது மேலும் கண் சார்ந்த பிரச்னைகளை குறைக்க உதவுகிறது.
பாலக்கீரையில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் ஆர்த்தரைடிஸ் மற்றும் ஆஸ்டியோபோராசிஸ் உள்ளிட்ட எலும்பு மண்டலம் சார்ந்த பிரச்னைகளை குறைக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தை சரி செய்ய உதவுகிறது. இளமையான தோற்றத்தை தந்து உடலுக்கும் மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
ரத்தசோகையை தடுக்கக் கூடியது
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்னையைத் தடுக்கக் கூடியது. மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய இன்பிளமேஷன்களை குறைப்பதற்கு பாலக்கீரை உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலில் ஏற்படக்கூடிய ஆக்ஸிஜனேற்ற அழுத்ததைத் தடுக்க பாலக்கீரை உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
பாலக்கீரை பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக பொரியல், கடையல், பருப்பு கூட்டு போன்றவை ஆகும். இந்தியாவில், வடஇந்திய உணவுகளில் பாலக்கீரை முக்கிய உணவாக அனைவரும் விரும்பி உண்கின்றனர். பாலக்கீரையை பனீருடன் சேர்த்து சமைப்பதும் பிரபல உணவாக இருந்து வருகிறது.பாலக்கீரையை சாறு எடுத்து தேனுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் புண் போன்ற பல நோய்களை தடுக்க உதவும். இருப்பினும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே உட்கொள்வது நலம்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது.பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும். பாலக்கீரையுடன் சிறிதளவு வேப்பிலை, ஓமம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி அருந்தி வர, பெரு வயிறு குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு பாலக் கீரை மிகவும் ஏற்றது. வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து உண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
பாலக்கீரை இலைச் சாற்றுடன், சீரகம் 5 கிராம், பூண்டு இரண்டு பல் ஆகியவற்றை அரைத்து மூன்று சம பாகமாகப் பிரித்து வடிகட்டி மூன்று வேளை சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். பாலக்கீரையில் புரதச்சத்து நிறைந்துள்ளதால், அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு, இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.