குடிநீர் விநியோகம் கோரி வல்லம்பட்டி மக்கள் சாலை மறியல்
ஏழாயிரம்பண்ணை, அக். 28: வெம்பக்கோட்டை அருகே, குடிநீர் விநியோகம் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை ஊராட்சியில் வல்லம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பொதுமக்களுக்கு வெம்பக்கோட்டை அணை மற்றும் மானூத்து ஆகிய இரண்டு இடங்களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வல்லம்பட்டி-சாத்தூர் சாலையில், ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், சில தினங்களுக்கு முன் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மோட்டார் அறையில் வெள்ளம் புகுந்து வயர்கள் சேதமடைந்துவிட்டன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதனை சரி செய்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.