பொய்கை கால்நடை சந்தையில் ரூ.70 லட்சம் வர்த்தகம்
வேலூர், ஜூலை 23: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து கடந்த வார நிலையே இருந்ததால் விற்பனை ரூ.70 லட்சத்துக்கு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறுகிறது. உள்ளூர் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
சாதாரணமாக இங்கு ஒரு நல்ல கறவை மாடு என்பது ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சத்துக்கு மேல் வரை அதன் தரத்துக்கும், கறவை திறனுக்கும் ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் காளைகள், உழவு மாடுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. கால்நடைகள் மட்டுமின்றி அதோடு இணைந்த காய்கறி சந்தையும் இங்கு நடக்கிறது. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ₹70 லட்சம் முதல் ₹1.30 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும்.
இந்நிலையில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் கடந்த வாரம் போன்றே ஆயிரம் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து கால்நடை வியாபாரிகள் கூறுகையில், கோடை முடிந்து தற்போது தொடர்ந்து வடமேற்கு பருவ மழை பெய்து வருவதால் தீவன தட்டுப்பாடு இல்லை. மேலும் விவசாயிகளும் மாடுகளை விற்பனை செய்ய தயங்குகிறார்கள். இதனால் மாடுகள் வரத்து சற்று குறைந்துள்ளது.
தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளில் விலை அதிகமாக உள்ளது. இதனால் விற்பனையும் ₹65 லட்சம் வரை நடந்தது. அதோடு கால்நடைகளுடன் கோழிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளுக்கான கயிறு, கழுத்துப்பட்டி உட்பட பொருட்கள் அனைத்தும் சேர்ந்து ரூ.5 லட்சம் வரையும் என மொத்தம் பொய்கை கால்நடை சந்தையில் ரூ.70 லட்சம் வரை விற்பனை நடந்ததாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.