பாம்பு கடித்து விவசாயி உள்பட 2 பேர் சாவு
திசையன்விளை, ஜூலை 31: திசையன்விளை அருகே உள்ள வாகைநேரி கிராமத்தை சேர்ந்தவர் திரவியம் (33). இவர் சுவிசேஷபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று மாலை தொட்டிக்காரன்விளை பகுதியில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கேட்வால்வை திருப்பச்சென்றுள்ளார். அப்போது அவரது காலில் ஏதோ கடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தேடிய போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. உடனடியாக திரவியத்தை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், திரவியம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். திரவியம் பாம்பு கடித்து இறந்தது குறித்து திசையன்விளை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல், களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் முத்துக்குமார் (40). பெயிண்டரான இவர் தனது தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி தனது வீட்டின் முன்பு முத்துக்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த விஷப்பாம்பு அவரை கடித்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த முத்துக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.