அரசு பஸ்-ஆம்புலன்ஸ் மோதல் நோயாளி பரிதாப சாவு
நாகர்கோவில், ஜூலை 30: வள்ளியூரை சேர்ந்தவர் பால்ராஜ் (75). உடல் நலம் பாதிக்கப்பட்ட பால்ராஜை நேற்று இரவு வள்ளியூரில் இருந்து நாகர்கோவிலில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். நாகர்கோவில் பால்பண்ணை அருகே வரும்போது சென்டர் மீடியனின் வலதுபுறம் ஆம்புலன்ஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்று கொண்டு இருந்த அரசு பஸ் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்சில் முன்புறம் சேதமடைந்தது. இதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட நோயாளி பால்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.