களக்காட்டில் தரைப்பாலத்தில் அபாயகரமான பள்ளம்
களக்காடு,ஆக.2: களக்காடு கோட்டை விஸ்வகர்மா தெருவுக்கு செல்லும் சாலையில் தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படும் முன்பு நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு கூலக்கடை பஜாரிலிருந்து கோட்டை விஸ்வகர்மா தெருவிற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு கான்கிரீட் கம்பிகள் சேதமடைந்தது. இதனால் பாலத்தில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த அபாயகரமான பள்ளத்தின் மீது பெரிய கல்லை வைத்துள்ளனர். தினமும் இந்த சாலையில் டூவீலர், கார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. ஏராளமான பள்ளி மாணவர்களும் காலை, மாலை வேளைகளில் பழுதடைந்த தரைப் பாலத்தின் வழியாக கடந்து சென்று வருகின்றனர். இந்த பள்ளத்தால் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.