தலைவன் கோட்டையில் தெருகுழாய் அமைக்கும் பணிக்கு ஐகோர்ட் பாராட்டு
மதுரை, ஜூலை 24: ரூ.5 லட்சத்தில் தெருகுழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பா ராட்டு தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டம், தலைவன்கோட்டையில் சிலரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்தததாக திருமலைச்சாமி என்பவர் மீது புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து திருமலைச்சாமி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். புகார்தாரர் முனியம்மாள் தரப்பில், மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர் குழாயிலிருந்து, தண்ணீர் பெறுவது கடினமாக உள்ளதாக நீதிபதியிடம் கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதி, ‘‘தண்ணீர் பொதுவான வளம். அதை பகிர்ந்து கொள்வதில்கூட, இன்னும் பிற சமூகத்தினரால் சிலர் ஒடுக்குமுறையை எதிர் கொள்கின்றனர். இது அறிவியல் யுகத்தில் வியப்பாக உள்ளது. தலைவன்கோட்டை தெருக்களில் போதிய குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் ஒளிராஜா ஆஜராகி, கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் ெசய்தார். அதில், ரூ.5 லட்சம் செலவில் குழாய்கள் அமைக்கும் பணி நடக்கிறது என கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக அரசு மற்றும் கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தார்.