காதல் திருமணம் செய்து 2 சிறுமிகள் கர்ப்பம்: கணவர்கள் உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை : வந்தவாசி அருகே பரபரப்பு
வந்தவாசி, ஜூலை 26: வந்தவாசி அருகே காதலித்து திருமணம் செய்து 2 சிறுமிகள் கர்ப்பமானதால், அவர்களது கணவர்கள் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் தவமணி(26). இவர் சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, கடந்த மாதம் 8ம்தேதி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கு சேகர் மற்றும் அவரது மனைவி சுமதி, சிறுமியின் தாய் லட்சுமி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது வந்தவாசி அரசு மருத்துவமனை பரிசோதனையில் தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவ அலுவலர் மகளிர் போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தார். தொடர்ந்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்தார். அதேபோல் வல்லம் கிராமத்தை சேர்ந்த அருள் மகன் அரவிந்தன்(27) அவரது உறவினர் மகளான 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி வந்தவாசி மும்முனி புறவழிச் சாலையில் உள்ள பச்சையம்மன் கோயிலில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக உள்ளது வந்தவாசி அரசு மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவ அலுவலர் சிவப்பிரியா லோகேஸ்வரன் நேற்று மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த சிறுமியும் புகார் அளித்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து இரு வழக்குகளிலும் தலைமறைவாக உள்ள 2 சிறுமியின் கணவர்கள், மாமியார், மாமனார், தாய் ஆகியோர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.