நடப்பாண்டில் அமராவதி அணையில் இருந்து 2வது முறையாக உபரிநீர் திறப்பு
உடுமலை, ஜூலை 26: அமராவதி அணையில் இருந்து நடப்பாண்டில் 2வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தவிர, ஆற்றின் வழியோரம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த அணையில் 4.04 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் அமராவதி அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணையின் நீர்மட்டம் கடந்த ஜூன் 17ம் தேதி 88 அடியை எட்டியதால் உபரிநீர் ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முழு கொள்ளளவில் உள்ளது.
இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையில் நேற்று முன்தினம் நீர்மட்டம் 88 அடியை தாண்டியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
நேற்றும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, 4 ஷட்டர்கள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நடப்பாண்டில் 2வது முறையாக உபரிநீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 2,685 கன அடியாக இருந்தது. ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக வினாடிக்கு 2716 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.