துவரங்குறிச்சி பகுதியில் 14 கிலோ குட்கா பறிமுதல்
துவரங்குறிச்சி, ஆக.3: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதிகளில் அதிக அளவில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தனிப்படை பிரிவு காவலர்கள் துவரங்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி துவரங்குறிச்சி மற்றும் பிடாரப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தபோது துவரங்குறிச்சியில் முருகேசன் என்பவரது பெட்டிக்கடையில் சுமார் 13 கிலோ குட்காவும், நாராயணன் என்பவரது பெட்டிக்கடையில் சுமார் ஒரு கிலோ குட்காவும் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குட்கா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இருவர் மீதும் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.