முசிறி வட்டத்தில் காவிரி கரையோரங்களில் பேரிடர் மீட்பு குழு முகாம்
முசிறி, ஜூலை 28: முசிறி தாலுகாவில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு காவிரி கரை ஓரங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் தற்போது பெருமழை பெய்து வருகிறது அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக அங்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்துவரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் முசிறி வட்டத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை வாய்ப்பு குழுவினர் ஆய்வாளர் கலையரசன் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் வருகை புரிந்துள்ளனர்.
இவர்கள் எந்த நேரமும் மக்களுக்கு பணி செய்யும் வகையில் குணசீலம் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களை முசிறி தாசில்தார் லோகநாதன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் குணசீலம் தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.