சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்
தூத்துக்குடி, ஜூலை 26:தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், அனைவர் வாழ்விலும் செல்வவளம் பெருக வேண்டியும் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 2025 கிலோ மிளகாய் வற்றல் மஹா யாக வழிபாடு நடந்தது.
பின்னர் மதியம் 12 மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகமும், மதியம் 12.50 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது. மஹா யாகத்தினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாக வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு சற்குரு சீனிவாச சித்தர் அருளாசி வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.