திருவிடைமருதூர் அருகே பேருந்து சேவை நீட்டிப்பு
திருவிடைமருதூர், ஜூலை 25: திருவிடைமருதூர் அருகே சேங்கனூரில் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம், சேங்கனூரில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படியும், உயர்கல்விதுறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் பேருந்து நீட்டிப்பு சேவை துவக்க விழா நடைபெற்றது.
இப்பகுதி பள்ளி, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம், கும்பகோணம்-1 கிளை மூலம் கும்பகோணத்திலிருந்து ஆரலூர் வரை இயக்கப்படும் நகர பேருந்தை சேங்கனூர் திருமூவர் கோவில் வழியாக தட நீட்டிப்பு செய்து 3 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த தட நீட்டிப்பு செய்த பேருந்தினை சேங்கனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து மயிலாடுதுறை முன்னாள் எம்.பி ராமலிங்கம் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் உள்ளூர் கணேசன், அண்ணாதுரை, சுதாகர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் முத்துக்குமாரசாமி, துணை மேலாளர் (வணிகம்) ராஜேஷ், கோவி.ஆசைத்தம்பி, வழக்கறிஞர் ரவி, கும்பகோணம்-1 கிளை மேலாளர் திருஞானசம்பந்தம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.