கும்பகோணம் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 700 மனுக்கள்: 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு
கும்பகோணம், ஜூலை 26: கும்பகோணம் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பல்வேறு துறைகளில் விண்ணப்பிக்கப்பட்ட 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அரசுத்துறையில் சேவைகள் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து பொதுமக்களின் பேராதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட கும்பேஸ்வரன் திருமஞ்சன வீதியில் உள்ள தங்கம்மாள் மண்டபத்தில் 14, 15, 16 ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன், ஆணையர் காந்திராஜ், சார் ஆட்சியர் ஹிருத்தியா மற்றும் மாநகர் நல அலுவலர் டாக்டர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி செயலாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் பங்கேற்று முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விண்ணப்பித்த மனுவில் உடனடி தீர்வு பெற்ற உத்தரவை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தனர். இம்முகாமில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மேலும் காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் சுமார் 700 மனுக்கள் பெறப்பட்டு பல்வேறு துறைகளை சார்ந்த 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய ஒன்றிய செயலாளர் உள்ளூர் கணேசன், மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், மாமன்ற உறுப்பினர்கள் அய்யப்பன், தீபா, பாலாஜி, அனந்தராமன், வார்டு செயலாளர்கள் ஜெகந்நாதன், கோபி, குமார், வட்டாட்சியர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள், அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.