ஆடி இரண்டாவது வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
விராலிமலை, ஜூலை 26: ஆடி வெள்ளியையொட்டி, விராலிமலை பகுதி அம்மன் கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை தரிசித்து சென்றனர்.அம்மன் வழிபாட்டுக்கு சிறந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு உகந்த ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித் தபசு, ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆடி பதினெட்டு, ஆடி பௌர்ணமி, என பல்வேறு விழாக்கள் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.இம்மாதத்தில், பெரும்பாலான அம்மன் கோயில்களில் குண்டம், தேர் திருவிழா, சாட்டு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும். அதேபோல், ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள், திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து உபயதாரர்கள் சார்பில் சர்க்கரை பொங்கல், கூழ், சுண்டல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.