கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
புதுக்கோட்டை, ஜூலை 31: கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் மழை வேண்டி முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பிடாரி அம்மன் கோயிலில் மழை வேண்டி ஆடி மாதத்தில் முளைப்பாரித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவையொட்டி, அப்பகுதி பெண்கள் வீடுகளில் சிறப்பு வழிபாட்டுடன் தானியங்களை வைத்து வளர்த்த முளைப்பாரிகளை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் சுமந்தவாறு கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாணவேடிக்கை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகச்சென்று கோயில் குளத்தில் முளைப்பாரிகளை விட்டனர்.
தொடர்ந்து, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவில், கொத்தமங்கலம், அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.