புதுக்கோட்டை மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலைஞர் பிறந்தநாள் விழா: போட்டிகளில் வென்றோருக்கு பரிசு; கலெக்டர் அருணா வழங்கினார்
புதுக்கோட்டை, ஜூலை 29: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 523 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.40,000 மதிப்பிலான காதொலிக் கருவிகளும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.11,445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளும் என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.51,445 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 10.07.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 11.07.2025 அன்றும் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு பேச்சுப்போட்டிகள் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நடத்தப்பெற்றன.
இப்போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000, அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு சிறப்புப்பரிசு ரூ.2,000 வீதம் இருவருக்கும் என மொத்தம் ரூ.48,000 க்கான பரிசு தொகைக்கான காசோலைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, உதவி ஆணையர் (கலால்).திருமால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.