புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
புதுக்கோட்டை, ஜூலை 28: புதுக்கோட்டை மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத்துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படும்.
இம்முகாம்களில், பெறப்படும் விண்ணப்பங்களின் மீது உடனடியாகத் தீர்வு கிடைக்கக்கூடிய இனங்களில் உடனடியாகத் தீர்வுகாணப்படும். பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். இம்முகாம், வரும் 29ம் தேதி அன்று கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாநகராட்சி 7 மற்றும் 8 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வடக்கு முதல் வீதியில் உள்ள டவுன் ஹாலிலும், அறந்தாங்கி நகராட்சி, 6, 7 மற்றும் 8 வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ராஜேஸ்வரி மஹாலிலும்; விராலிமலை - 4 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு ஆவூர் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்திலும்;
கறம்பக்குடி - 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்திலும், கந்தர்வக்கோட்டை - 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு வெள்ளாள விடுதி சமுதாயக் கூடத்திலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம். இத்தகவலை, மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.