ஆக.4ம்தேதி தேர்பவனி நாரணமங்கலம் கிராமத்தில் 1ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பாடாலூர், ஜூலை 28: ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான மனு, மற்றும் இணைப்பு படிவம் கிடைக்காமல் அவதியுறும் பொதுமக்கள் இதனால்அரசுக்கு தங்களின் கோரிக்கைளை தெரியப்படுத்த முடியவில்லை என்று கூறினர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் 1-8-2025 அன்று நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாவட்ட கலெக்டர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக பொறுப்பாளர், ஒன்றிய கழக பொறுப்பாளர், ஆலத்தூர் தாசில்தார்கள், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில் சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், கூட்டுறவு, வருவாய்த்துறை, எரிசக்தித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை,
தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில் நுட்பதுறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை சார்ந்து மனுக்கள் பெறப்படும். குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு இணைப்புப்படிவம் தராமல் வெறும் மனு மட்டும் பொதுமக்களுக்கு வழங்கி வருவதாக கூறுகின்றனர். நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இதுபற்றி கூறும்போது, இணைப்புப் படிவம் தீர்ந்து விட்டதாகவும், தற்போதைக்கு மனுக்கள் மட்டுமே வழங்க முடியும் என்று அதிகாரிகள் பதில் அளிப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் மனுக்கள் கூட ஒரு சில நபர்களுக்கு மட்டும் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த இணைப்புப் படிவத்தில்தான் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து தகவல் அளிக்க முடியும். இப்படி இணைப்பு படிவம் தராமல் உள்ளதால் நாங்கள் எப்படி எங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்துவது என்றும், இணைப்பு படிவம் வழங்குவதற்கு நடடிக்கை டுக்க வேண்டுமென பொதுமக்கள் வேதனையுன் கூறினர்.